Sunday, 10 July 2016

சுவாதி கொலை வழக்கு; ராம்குமாரை அடையாளம் காட்டுவதற்கு நாளை புழல் சிறையில் அடையாள அணிவகுப்பு

கம்ப்யூட்டர் என்ஜினீயர் சுவாதி கொலை வழக்கு தொடர்பாக புழல் சிறையில் நாளை அடையாள அணிவகுப்பு நடத்தப்படுகிறது.
சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் சுவாதி கடந்த 24-ந் தேதி நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் நெல்லை மாவட்டம் செங்கோட்டையை அடுத்துள்ள மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் என்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். போலீசாரை கண்டதும் தனது கழுத்தை அறுத்துக்கொண்ட அவர், சென்னை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். உடல்நிலை ஓரளவு சரியானதால் ராம்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
புழல் சிறையிலும் அங்குள்ள ஆஸ்பத்திரி பிளாக்கில் தனி அறையில் ராம்குமார் அடைக்கப்பட்டுள்ளார்.
இவர் தற்கொலைக்கு முயற்சி செய்யலாம் என்பதால் 24 மணி நேரமும் இரண்டு சிறை போலீசார் கண்காணித்து வருகின்றனர். ராம்குமார் கழுத்தை அறுத்துக்கொண்டதால் ஏற்பட்ட காயம் ஆறுவதற்கு சிறை டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அத்துடன் அவருக்கு ஆலோசனைகளும், அறிவுரைகளும் வழங்கப்பட்டு வருகிறது. ராம்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டு 4 நாட்கள் மேல் ஆகியும் பெற்றோர், உறவினர்கள் வந்து பார்க்கவில்லை. இதனால் அவர் பித்துபிடித்தவன் போல் இருப்பதாக சிறைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்நிலையில் சுவாதி கொலை வழக்கு தொடர்பாக புழல் சிறையில் நாளை அடையாள அணிவகுப்பு நடத்தப்படுகிறது. கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள ராம்குமாரை அடையாளம் காட்டுவதற்கு அணிவகுப்பு நடத்தப்படுவதாக போலீஸ் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment