Friday, 12 August 2016

திருச்சி வானொலியில் தமிழ் செய்திகள் நிறுத்தமா? குழப்பத்தை போக்க வேண்டும்

திருச்சி வானொலியில் தமிழ் செய்திகள்
நிறுத்தமா? குழப்பத்தை போக்க வேண்டும் இராமதாஸ்
            ----------அறிக்கை-------------------

ஆட்குறைப்பு என்ற பெயரில் மிகவும் அநியாயமான முடிவை மத்திய செய்தி ஒலிபரப்பு அமைச்சகம்  எடுத்திருக்கிறது. தலைநகர் தில்லி, திருச்சி ஆகிய வானொலி நிலையங்களில் இருந்து ஒலிபரப்பாகும் தமிழ் செய்திகளை நிறுத்த மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இச்சிக்கல் பற்றி முன்னுக்குப்பின் முரணாக வெளியாகி வரும் செய்திகள் குழப்பத்தை போக்குவதற்கு பதிலாக அதிகரித்து வருகின்றன.

இந்தியாவில் புதிய பொருளாதாரக் கொள்கைகள் நடைமுறைப்படுத்த நாள் முதல் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும்  நடவடிக்கைகளில் முக்கியமானவை பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அவற்றின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதும், அரசுத் துறைகளில் ஆட்குறைப்பு செய்வதும்  தான். புதிய பொருளாதாரக் கொள்கைகள் அறிமுகம் செய்யப்பட்டதன் 25 ஆம் ஆண்டு விழா இந்த ஆண்டு கொண்டாடப்படும் நிலையில், வெள்ளி விழா பரிசாக செய்தி ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நிறுவனங்களில் மிகப்பெரிய அளவில் ஆட்குறைப்பு செய்யப்படுகிறது. இந்த அமைச்சகத்தின் கீழ் இயங்கும் துறைகளின் பல கிளை அலுவலகங்களை மூட மத்திய அரசு ஆணையிட்டிருக்கிறது.

அரசின் இந்த நடவடிக்கையால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது அகில இந்திய வானொலியின் செய்திப் பிரிவுகள் தான். உதாரணமாக தில்லி வானொலி நிலையத்திலிருந்து  நாள்தோறும் காலை 7.15 மணி, பிற்பகல் 12.40 மணி, இரவு 7.15 மணி என மூன்று முறை 10 நிமிட தமிழ் செய்திகள் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன. அதேபோல், திருச்சி வானொலி நிலையத்திலிருந்து நாள்தோறும் பிற்பகல் 1.45 மணிக்கு 10 நிமிட தமிழ் செய்தி அறிக்கையும், பகலில் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை  செய்திச் சுருக்கமும் ஒலிபரப்பப்பட்டு வருகின்றன. இவை அனைத்தையும் நிறுத்த செய்தி ஒலிபரப்பு அமைச்சகம் ஆணையிட்டுள்ளது. இந்த வானொலி நிலையங்களின் செய்திப் பிரிவுகளில் பணியாற்றி வந்த செய்தித்துறை அதிகாரிகள் இந்தியாவின் பல பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல், தில்லி வானொலி நிலைய தலைமை அலுவலகத்திலிருந்து ஒலிபரப்பப்பட்டு வந்த பிற மொழி செய்தி அறிக்கைகளும் நிரந்தரமாக ரத்து செய்யப்படுகின்றன. தில்லியிலிருந்து தமிழ், மலையாளம், ஒதியா, காஷ்மீரி உட்பட 14 பிராந்திய மொழிகளிலும், ஆங்கிலம், இந்தியிலும் செய்திகள் ஒலிபரப்பப்பட்டு வந்த நிலையில், ஆங்கிலம், இந்தி, காஷ்மீரி ஆகிய 3 மொழிகள் தவிர மீதமுள்ள 13 மண்டல மொழிகளில் ஒலிபரப்பப்பட்டு வந்த செய்திகள் நிறுத்தப்படவுள்ளன. இந்த நடவடிக்கைகளின் மூலம் மத்திய அரசு எதை சாதிக்கப் போகிறது என்பது தெரியவில்லை. இந்தியாவில் தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப புரட்சி காரணமாக கடந்த 15 ஆண்டுகளில் செய்தித் தொலைக்காட்சிகள் பெருகிவிட்ட போதிலும் வானொலி நிலையங்கள் வழங்கும் செய்திகளுக்கு இன்னும் தனி மரியாதை  உள்ளது. வானொலி செய்திகளுக்கு மக்களிடையே மிகப்பெரிய அளவில் நம்பகத் தன்மை உள்ளது.

தனியார் செய்தித் தொலைக்காட்சிகளின் பரவல் நகரங்கள் மற்றும் பெரிய கிராமங்களுடன் நின்று விட்ட நிலையில், குக்கிராமங்களில் உள்ள மக்களுக்கும் நாட்டு நடப்பை தெரிவிக்கும் ஒரே தூதர் வானொலி செய்திகள் தான். பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுடன் ‘மனம் திறந்து’ பேசும் நிகழ்ச்சியை தனியார் தொலைக்காட்சிகளிலும், தூர்தர்ஷனிலும் நடத்தாமல் வானொலியில் நடத்துவதில் இருந்தே வானொலியின் சிறப்பை உணரலாம். அதிலும் குறிப்பாக தில்லி தமிழ் வானொலி செய்திக்கு தனிச் சிறப்பு உண்டு. 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியா விடுதலை அடைந்த செய்தியை இந்தியா மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் வாழும் நேயர்களுக்கு முதலில் தெரிவித்தது தில்லி வானொலியில் அன்று காலை 5.30 மணிக்கு ஒலிபரப்பட்ட தமிழ் செய்திகள் தான். இவ்வளவு சிறப்பு மிக்க தமிழ் செய்திப் பிரிவை மூடும் முடிவு கண்டிக்கத்தக்கது; இதை ஒருபோதும் ஏற்கமுடியாது.
வானொலி செய்திகள் மூடப்படுவது குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, அந்த முடிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுவதாக பிரசார் பாரதி அமைப்பு தெரிவித்துள்ளது. வானொலி நிலையங்களை நடத்துவது மட்டுமே பிரசார் பாரதியின் பொறுப்பு ஆகும். செய்திப்பிரிவுகள் மத்திய அரசின் நேரடிக்கட்டுப்பாட்டில் வருகின்றன. செய்திப்பிரிவுகள் மூடப்பட்டதாக மத்திய அரசே அறிவித்துள்ள நிலையில், அதை பிரசார்பாரதியால் எவ்வாறு மாற்ற முடியும் என்பது தெரியவில்லை. பிரசார்பாரதி அமைப்பு அளித்துள்ள விளக்கத்தால் குழப்பம் விலகுவதற்கு பதிலாக அதிகரித்திருக்கிறது.

மற்றொருபுறம், தில்லி மற்றும் திருச்சியிலிருந்து ஒலிபரப்பப்பட்டு வந்த தமிழ் செய்தி அறிக்கைகளை சென்னையில் உள்ள மண்டல செய்திப் பிரிவிலிருந்து ஒலிபரப்பும் திட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், சென்னை மண்டல செய்திப்பிரிவிலிருந்து இணை இயக்குனர் பணியிடம் நீக்கப்பட்டுவிட்ட நிலையில் இது சாத்தியமா? எனத் தெரியவில்லை. ஒருவேளை அந்த செய்திகள் சென்னையிலிருந்து  ஒலிபரப்பப்பட்டாலும் அதன் நோக்கம் நிறைவேறாது. ஏனெனில், தில்லியிலிருந்து ஒலிபரப்படும் தமிழ் செய்திகளில் தேசிய செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். அதேபோல், திருச்சியில் இருந்து ஒலிபரப்பப்படும் செய்திகளில் விவசாயம், மீன்வளம் குறித்த செய்திகளுக்கும், காவிரி பாசன மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்வுகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும். இந்த செய்திகள் சென்னையிலிருந்து ஒலிபரப்பாகும் போது தேசிய, உள்ளூர் செய்திகளுக்கு முக்கியத்துவம் கிடைக்காது.

எனவே, தில்லி, திருச்சி வானொலி நிலையங்களில் இருந்து ஒலிபரப்படும் தமிழ் செய்திகளை நிறுத்தும் திட்டத்தை நிரந்தரமாக கைவிட்டு, அவை இப்போதுள்ள நிலையிலேயே தொடரும் என மத்திய அரசு அறிவிக்க வேண்டும். மேலும், பத்திரிகை தகவல் அலுவலக மதுரைக் கிளை, செய்தித்தாள் பதிவாளர் அலுவலகத்தின் சென்னைக் கிளை ஆகியவற்றை மூடும் முடிவையும் மத்திய அரசு கைவிட வேண்டும்.

Thursday, 11 August 2016

கரும்பு விவசாயிகளுக்கான நிலுவையை  அரசு உடனடியாக பெற்றுத் தர வேண்டும்

கரும்பு விவசாயிகளுக்கான நிலுவையை 
அரசு உடனடியாக பெற்றுத் தர வேண்டும் மருத்துவர் இராமதாஸ் அறிக்கை

                      
கரும்பை விளைவிக்கும் விவசாயிகளின் வாழ்க்கை தமிழகத்தில் கசப்பாக மாறி விட்டது. உழவர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட கரும்புக்கான தொகையை சர்க்கரை ஆலை நிர்வாகங்கள் வழங்க மறுக்கின்றன. அதை வசூலித்துத் தர வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உண்டு என்ற போதிலும், இந்த விஷயத்தில் ஆட்சியாளர்கள் அலட்சியம் காட்டுவது கண்டிக்கத்தக்கது.

அரசு மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகள் கொள்முதல் செய்யும் கரும்புக்கான விலையை மத்திய அரசு நிர்ணயிக்கும். அத்துடன் மாநில அரசு அதன் பங்காக பரிந்துரை விலை நிர்ணயித்து, இறுதி கொள்முதல் விலையை அறிவிக்கும்.  மாநில அரசால் அறிவிக்கப்படும் விலையை சர்க்கரை ஆலைகள் வழங்குவது வழக்கம். ஆனால், கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய கொள்முதல் விலை நிலுவைத் தொகையை ஆலை நிர்வாகங்கள் வழங்க மறுக்கின்றன. உழைத்தவனின் வியர்வை காயும் முன் அவனுக்குரிய ஊதியத்தை வழங்கிவிட வேண்டும் என்பது கரும்பு உழவர்களுக்கும் பொருந்தும். ஆனால், அவர்களுக்கு திட்டமிட்டு துரோகம் இழைக்கப்படுகிறது.

அண்மையில் நாடாளுமன்றத்தில் உணவுத்துறை இணை அமைச்சர் சி.ஆர். சவுத்ரி வெளியிட்ட புள்ளி விவரத்தில், விவசாயிகளுக்கு கரும்பு நிலுவைத் தொகை அதிகம் வைத்துள்ள மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில்   கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் ரூ.3046 கோடி நிலுவை வைத்துள்ளன. அதற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் உள்ள சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு ரூ.1589 கோடி நிலுவைத் தொகை வைத்திருக்கின்றன. இது இதுவரை இல்லாத அளவு என்பது குறிப்பிடத்தக்கது.
2013-14 ஆம் ஆண்டில் கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் ரூ.273 கோடி நிலுவை வைத்திருந்தன. 2014-15 ஆம் ஆண்டில் இது ரூ.286 கோடி அதிகரித்து ரூ.559 கோடியாக உயர்ந்தது. 2015&16 ஆம் ஆண்டில் வரலாறு காணாத வகையில் ரூ.1030 கோடியை சர்க்கரை ஆலைகள் பாக்கி வைத்ததால் தான் நிலுவைத் தொகை இந்த அளவுக்கு உயர்ந்தன. தமிழக அரசு நினைத்தால், இந்த நிலுவைத் தொகையை தமிழக அரசு ஒரு வாரத்தில் வசூலித்து விவசாயிகளுக்கு வழங்க முடியும்.  ஆனால், உழவர்களுக்கான நிலுவைத் தொகையை வழங்காமல் ஏமாற்றி விட வேண்டும் என்று சர்க்கரை ஆலை நிர்வாகங்களும், சர்க்கரை ஆலை நிர்வாகங்களின் நலனை மட்டும் பாதுகாத்தால் போதுமானது என்று தமிழக அரசும் நினைப்பது தான் இன்றைய அவல நிலைக்கு காரணம் ஆகும்.

உலகச் சந்தையில் சர்க்கரை விலை குறைந்துவிட்டதால் தான் கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை வழங்க முடியவில்லை என்று சர்க்கரை ஆலை நிர்வாகங்கள் கூறுவதை ஏற்க முடியாது. உண்மையில் அனைத்து சர்க்கரை ஆலைகளும் நல்ல லாபத்தில் தான் இயங்குகின்றன. ஆனாலும்,  விவசாயிகளுக்கு மாநில அரசால் பரிந்துரைக்கப்பட்ட விலையை வழங்கக்கூடாது என்பதற்காகவே  சர்க்கரை ஆலைகள் முழு விலையையும் வழங்காமல் ஒரு குறிப்பிட்ட தொகையை பாக்கி வைக்கின்றன. உதாரணமாக, கடந்த 2015-16 ஆம் ஆண்டில் ஒரு டன் கரும்புக்கான கொள்முதல் விலையாக 2300 ரூபாயை மத்திய அரசு நிர்ணயித்தது. அத்துடன் மாநில அரசு பரிந்துரை விலையாக ரூ.550 சேர்த்து   ரூ.2850 வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். ஆனால், மாநில அரசு அறிவித்த பரிந்துரை விலையை வழங்க மறுத்துவிட்ட சர்க்கரை ஆலைகள், மத்திய அரசு நிர்ணயித்த  டன்னுக்கு ரூ.2300 என்ற விலையை மட்டுமே வழங்குவதால் தான் நிலுவைத்தொகை அதிகரித்துள்ளது.

2011 சட்டமன்ற தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கையில்,‘‘கரும்பு உழவர்களுக்கு உடனடியாக அரசு மற்றும் தனியார் அரசு ஆலைகள் கொள்முதல் விலையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆலை அதிபர்கள் பணப் பட்டுவாடாவை நிலுவையில் வைக்க அனுமதிக்கப்பட மாட்டாது’’ என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகை அதிகரித்திருக்கிறதே தவிர குறையவில்லை என்பது தான் உண்மை. உழவர்களுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வசூலித்துத் தர வேண்டிய தமிழக ஆட்சியாளர்களின் கடமை ஆகும். இந்தக் கடமையிலிருந்து தமிழக ஆட்சியாளர்கள் தவறியதால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது மட்டுமின்றி, தமிழகத்தில் கரும்பு பயிரிடப்படும் நிலப் பரப்பு கிட்டத்தட்ட பாதியாக குறைந்திருக்கிறது. இது ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டிய விஷயம்.

தமிழகத்தில் கரும்பு விவசாயிகளின் வாழ்க்கையில் கசப்பை நீக்கி இனிப்பை நிறைக்க வேண்டியது  தமிழக அரசின் கடமையாகும். அக்கடமையை நிறைவேற்றும் வகையில், சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக விவசாயிகளுக்கு பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிவரும் காலங்களில் இத்தகைய நிலை ஏற்படுவதைத் தடுக்க, தமிழக அரசு அறிவிக்கும் கரும்புக்கான பரிந்துரை விலை சட்டப்படி செல்லுபடியாகும் ஒன்றாக மாற்றப்பட வேண்டும்.

தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்தும், தனி நாடாளுமன்றக்குழு அமைக்க கோரியும் நான் இன்று நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் திருமதி. சுமித்ரா மகாஜன் அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினேர் அன்புமணி

தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்தும், தனி நாடாளுமன்றக்குழு அமைக்க கோரியும் நான் இன்று நாடாளுமன்ற மக்களவைத் தலைவர் திருமதி. சுமித்ரா மகாஜன் அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினேர் .பின் பேசியது

அப்போது தமிழகத்தில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விரிவாக விளக்கினேன்.

தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுக்கும்  கலாச்சாரத்திற்கு முடிவு கட்டப்பட வேண்டும். தேர்தல் அறிக்கையில் இலவசங்களுக்கு தடை விதிக்கப்பட வேண்டும். தேர்தல் பணிகளில் முழுக்க முழுக்க வெளிமாநில அதிகாரிகளை ஈடுபடுத்த வேண்டும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து கருத்துக்கணிப்புகளுக்கு  தடை விதிக்க வேண்டும்.

அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவுகளுக்கு உச்சவரம்பு நிர்ணயிக்க வேண்டும்.  தேர்தலில் ஆளுங்கட்சியினர் ஆதிக்கம் செலுத்துவதை தடுக்க  தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து மாநிலங்களில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நடைமுறைப்படுத்த வேண்டும் இது குறித்து ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரை செய்ய தேர்தல் சீர்திருத்தங்களுக்காக தனி நாடாளுமன்ற நிலைக்குழு அமைக்க வேண்டும் என்றும் கோரி, இது தொடர்பான மனுவையும்  அவரிடம் வழங்கினேன்.

மனுவைப் பெற்றுக் கொண்ட மக்களவைத் தலைவர் இது தொடர்பாக மாநிலங்களவை மற்றும் மக்களவைச் செயலக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி விட்டு பதிலளிப்பதாக  தெரிவித்தார்.

Sunday, 7 August 2016

நன்பர்கள் தின வாழ்த்துகள்

மனைவி மட்டும் அல்ல…
நண்பர்கள் அமைவதும் இறைவன் கொடுத்த வரம் தான்.

என் சந்தோசத்தை தன் சந்தோசமாக
நினைத்து மகிழும் என் நலம் விரும்பிகளுக்கும்,

துக்கங்களிலும், தோல்விகளிலும் என்னை துவண்டுவிடாமல்
தோள்கொடுத்து உற்சாகப்படுத்தும் சக்திமான்களுக்கும்,

தவறுகளை கண்டும் காணாமல் போய்விடாது
அதை சுட்டிக்காட்டி என்னை நெறிப்படுத்தும் புத்திமான்களுக்கும்,

பேசத்துடித்தும் பேசமுடியா தூரத்தில்
காலத்தால் கடத்தப்பட்டபட்ட நல்லுள்ளங்களுக்கும்,

வேறுவழியில்லாமல் என்னிடம் பேசியே ஆகவேண்டிய
நிர்பந்தத்தில் கிடத்தப்பட்ட பாக்கியவான்களுக்கும்,

நட்பின் போர்வையில் இன்னும் தன் சுயரூபத்தை
வெளிக்காட்ட வாய்ப்புகிடைக்காத புண்ணியவான்களுக்கும்,

என் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!