Saturday, 23 July 2016

முகத்தில் உள்ள கருமை இரண்டே நாட்களில் நீங்க சில அற்புத வழிகள்

பேக்கிங் சோடா பேஸ்ட் பேக்கிங் சோடாவை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி வெளியே சென்று வீட்டிற்கு வந்ததும் செய்து வந்தால், முகத்தில் நல்ல மாற்றம் தெரியும். மென்மையான தோல் அமைப்பு கொண்டவர்கள் இதனை செய்ய வேண்டாம்.

வாழைப்பழம் மற்றும் பால் வாழைப்பழத்தை மசித்து, அதில் பால் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால், இரண்டே நாட்களில் முகத்தின் பொலிவு கூடியிருப்பதை நன்கு காணலாம்.

ரோஸ் வாட்டர்

ரோஸ் வாட்டரில் சிறிது பால் சேர்த்து கலந்து, தினமும் இரவில் படுக்கும் முன் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், முகத்தில் உள்ள கருமை நீங்கி, முகம் வெள்ளையாக பளிச்சென்று காணப்படும்.

கற்றாழை ஜெல்
கற்றாழை ஜெல்லைக் கொண்டு தினமும் முகத்தை மசாஜ் செய்து ஊற வைத்து கழுவி வந்தால், முகத்தில் வரும் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் நீங்கி, முகம் அழகாகவும், வெள்ளையாக மாறியிருப்பதையும் காணலாம்

(தொடரும்)

ஜாக்கி சானை முன்திய பாகுபலி

இந்திய சினிமாவில் மிகவும் பிரம்மாண்டமாக தயாராகி 500 கோடி வசூலித்த படம் பாகுபலி. 
பாகுபலி திரைப்படம் இன்று சீனா முழுவதும் சுமார் 6000 திரையரங்குகளில் நேற்று வெளியானது.இந்தியாவில் மட்டும் சுமார் 600 கோடி ரூபாய் வசூல் செய்த இந்த படம் சீன மொழியில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. ஜாக்கி சான் நடித்துள்ள  படமும் அதே நாளில் வெளியானாலும், பாகுபலிக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்துள்ளனர்.விமர்சகர்களும் ஜாக்கி சான்னை விட பாகுபலிக்கு அதிக மதிப்பெண் கொடுத்துள்ளனர், அதனால் வசூல் ரீதியாகவும் இந்த படம் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதற்குமுன் இந்திய படமான 'பிகே' சீனாவில் வெளியானபோது 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

இன்றையை சிந்தனைகள்

1. உனக்கு வந்திருப்பது எவ்வளவு பெரிய சோதனை என்று கடவுளிடம் சொல்லாதே.. உனக்கு துணையாக இருப்பவர் எவ்வளவு பெரிய கடவுள் என்று சோதனையிடம் சொல்..!

2. யானைக்கு கரும்பு தோட்டமே தேவைப்படுகிறது. எறும்புக்கு சக்கையே போதுமானதாக இருக்கிறது. தோட்டம் கிடைக்கும்போது யானையை இரு.. சக்கை கிடைக்கும்போது எறும்பாய் இரு.. வாழ்க்கையில் திருப்தியில்லை என்ற பேச்சுக்கே இடமிருக்காது..!

3. அன்பு இதயத்தில் இருக்கட்டும், அறிவு செயலில் இருக்கட்டும், ஆணவம் காலுக்கடியில் இருக்கட்டும், நம்பிக்கை மட்டும் நம் மொத்த உருவமாக இருக்கட்டும்..!!

4. தடைகளை தட்டிக்கழிப்பதை விட, தகர்த்து விடுவது தான் புத்திசாலித்தனம்...

Friday, 22 July 2016

காதல் கதை பகுதி 3

(இன்று மனோகரன் மான்செஸ்டரிலிருக்கும் தனது உறவினர்களின் வீட்டுக்குப் போய்விட்டான்.)
காதல்  கதை பகுதி  2

அவளைத் தனது வீட்டுக்குக் கூட்டிக் கொண்டுபோய்ச் சமைத்துக் கொடுக்கவேண்டுமென்று ஆசைப் பட்டான்.

அவளும் சரி என்று நீண்ட நேர யோசனையின் பின் சொல்லியிருக்கிறாள்.அவள் இவனின் வேண்டுகோளுக்கு, உடனடியாகச் சம்மதம் தெரிவிக்கவில்லை.

அவள் தயங்கியபோது,’என்னில் நம்பிக்கையில்லையா?’ சிவசங்கர் வாய்விட்டுக் கேட்டுவிட்டான்.

‘அப்படியெல்லாம் சொல்லவேண்டாம்’ என்று மழுப்பினாள்.

கொஞ்ச தயக்கத்தின் பின் இவனின் வீட்டுக்குச் சாப்பாட்டுக்குவரச் சம்மதித்தாள்;.

அவளுக்காகச் சிவசங்கர் காத்திருக்கிறான். மழையையும் குளிரையும் பொருட்படுத்தாமல் மனதில் பொங்கும் பல உணர்வுகளுடன் அவளுக்காகக் காத்திருக்கிறான்.

‘இறுக்கமாகவும் நெருக்கமாகவும் பழகச் சந்தர்ப்பம் வந்தால் விடாதே,ஆனால் பிடி கொடுக்காமல் நடந்து கொள்’ மனோகரன் தானொரு பாலியல் பேராசிரியர் மாதிரிச் சிவசங்கரின் காதல் எப்படி நடைமுறைப் படுத்தப்படவேண்டும் என்று புத்தி சொன்னான்.

மனோகரன் தன்னிடமுள்ள உண்மையான சினேகிதத்திற் சொல்கிறானா அல்லது மனோகரனுக்கு ஒரு பெண் சினேகிதிகளுமில்லாத ஆதங்கத்தில் சிவசங்கரைக் குழப்புகிறானா என்று அவனாற் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஆனாலும் அவளைக் கண்டதும் அவனைப் பற்றிப் பல விடயங்களை அவளுடன் பகிர்ந்து கொள்ளவேண்டுமென்று அவன் நினைத்தான் லண்டனுக்கு வர அவன் பட்ட கடன், குடும்பப் பொறுப்பக்கள் முடியவிட்டுத் தானும் படித்து லண்டனில் ஒரு பட்டதாரியாக வரும் தன் இலட்சியத்தை அவளுக்குச் சொல்லவேண்டுமென்ற நினைத்தான்.லண்டனில் அவனது உப்புச் சப்பற்ற வெற்று வாழ்வுக்கு அவள் ஒரு கலங்கரை விளக்காக வந்திருக்கிறாள் என்ற அவனது உண்மையான உணர்வை அவளுக்குக் கட்டாயம் சொல்லவேண்டும் என்ற நினைத்தான். அப்படிச் சொன்னால்,அவன் எவ்வளவு தூரம் அவளை நெருங்கிப் பழக விரும்புகிறான் என்பதை அவள் புரிந்து கொள்வாள் என்ற அவன் நம்பினான்.

மனோகரனிடம் அவற்றையெல்லாம் அவன் பகிர்ந்து கொள்வது கிடையாது.

அவனுக்குத் தான் சிந்தியாவைச் சாப்பாட்டுக்க அழைத்ததசை; சிவசங்கர் சொன்னான். சிவசங்கர் ஏன் புதிய சாப்பாட்டுத் தட்டுகளை வாங்கினான் என்ற மனோகரன் கேள்விக் குறியுடன் பார்த்தபோது, வேறு வழியில்லாமல் சிவசங்கர் உண்மையைச் சொல்லவேண்டி வந்தது.

அதைக்கேட்டதும் மனோகரனின் முகத்தில் பரவிய உணர்வு அவனது பொறாமையா அல்லது கிண்டலா என்று சிவசங்கருக்குப் புரியவில்லை.

‘ஐ லவ் யு என்று சொன்னால் இவளவை ஆரோடும் படுத்துப்போட்டுப் போவாளவை, உனக்குப் பெரிய பொறுப்புக்கள் இருக்கிறது என்பதை மறந்துபோகாதே ‘ மனோகரன் பெரிய அனுபவசாலியாகச் சொன்னான்.

சுpவசங்கர் தனது பாலியவயதில், சுரப்பிகளின் தூண்டுதல்களால், கோயிற் திருவிழாக்களிலும், நெருக்கமான கடைத்தெருக்களிலும் சாடையாக ‘உரஞ்சிப் பார்த்த’ குறும்புத்தனமான சேட்டைகள் ஞாபகம் வந்தன. சிந்தியாவுடன் பழகும்போது அப்படியொரு சேட்டைத்தனமான உணர்வுகளும் அவனுக்கு வரவில்லை.

மனோகரன் சொல்வதுபோல், அவனின் பாலியல் வெறிக்கு அவனுடன் அன்புடன்(?,), நேசத்துடன்(?),முக்கியமாக மரியாதையுடன் அவளைப் ‘பாவிக்கப் பார்க்கும்’ எந்த யோசனையும் எள்ளளவும் அவன் மனதிற் கிடையாது.

ஆனால் அவளில் அவனுக்குண்டான நுண்ணியமான இணைவான நெருக்கத்தை அவன் மறுக்கத் தயாராகவில்லை.

அவள் இன்னும் வரவில்லை. மழை சோ எனப் பெய்து கொண்டிருக்கிறது. வரமாட்டாளா? அவன் மனம் சிறகடித்தது.

என்னில் அவளுக்கு நம்பிக்கையில்லையா?

நான் கண்ணியமற்றவன் என்ற அவள் நினைக்குமளவுக்கு நான் பழகவில்லையே? அவன் பல கேள்விகளைத் தனக்குள் கேட்டுக் கொண்டான்.

அவன் தனது கேள்விகளுக்கு மறுமொழி தேடமுதல் அவள் மழையில் குடையைப் பிடித்துக்கொண்டு வருவது தெரிந்தது.

‘வெரி சாரி சங்கர்’ அவள் குடையை மடித்துக் கொண்டு சொன்னாள். அவள் முகத்தில் விழுந்த சில மழைத்துளிகள் முத்துக்களாக அவள் கன்னங்களில் உருண்டன.

அவன் கடிகாரத்தைப் பார்த்தான்.

‘ ஐ ஆம் வெரி சாரி’ உண்மையான மன்னிப்புக் கேட்கும் அவள் குரலில் அழகிய வீணையொலித்தது.

அவன் மறுமொழி சொல்லாமல் அவள் கன்னத்தில் உருளும் மழைத்துளிகளைப் பொறாமையாகப் பார்த்தான்.

அவள் தர்ம சங்கடத்துடன்,’ எதாவது குடிக்கப் போவோமா?’ அவள் பார்வை பக்கத்திலிருந்த ‘பப்பில்’ பதிந்தது.

அங்கு போனதும் அவன் தனக்கு பியரும் அவள் ஆரன்ஞ் சாறும் ஓர்டர் பண்ணிக் கொண்டார்கள்.

கடந்த ஒன்றிரண்டு மாதங்களில் சிலவேளைகளில் இப்படி அவர்கள் ஒன்றாகப் ‘பப்புக்குப்’ போயிருக்கிறார்கள்.

‘சங்கா’ அவள் குரலில் தயக்கம்.

அவன் அவளை ஏறிட்டுப் பார்த்தான்.

;நான் உன்னுடன் உனது வீட்டுக்குச் சாப்பிட வராவிட்டால் கோபித்துக் கொள்ள மாட்டாயே?’

அவன் தனது அதிருப்தியை மறைத்துக் கொள்ளத் தர்மசங்கடத்துடன் ஒரு புன்முறுவலைத் தன் முகத்திற் தவழவிட்டான்.

‘நான் உன்னைக் கட்டாயப் படுத்தவில்லையே’ அவன் எதிர்பார்ப்புக்குக் கிடைத்த ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு சொன்னான்.

அவன் ஒரு நடிகனல்ல. அவனது ஏமாற்றத்தை அவள் புரிந்து கொண்டாள்.

‘நான் நீண்டநேரம் யோசித்தேன்’ அவள் அவனை நேரே பார்த்துக்கொண்டு சொன்னாள். அவள் கண்கள் அழகானவை. பளிங்குபோன்ற அவள் முகத்தில் பதித்து வைத்த வைரம்மாதிரி அவனைப்பார்த்தன.

‘எதைப்பற்றி’

‘எங்களைப்பற்றி’ அவள பார்வை அவனில் இறுக்கமாகப் பதிந்து கிடந்தது.

‘எங்களைப்பற்றியா?’ அவன் குரலில் அவள் அவனையிணைத்து ‘ எங்களைப் பற்றியது’ என்ற சொன்னது அவனை நெகிழப் பண்ணியது.

‘ஆமாம் எங்கள் உறவைப் பற்றி’ அவள் அழுத்தமாகச் சொன்னாள்.

‘ நான் உன்னைச் சாப்பிடத்தான் என் வீட்டுக்கு அழைத்தேன்’ அவனுக்கு அவளின் பேச்ச தர்மசங்கடத்தையுண்டாக்கியது. மடமடவென்ற பியரைக் குடித்தான்.

‘கட்டிலுக்க வரச்சொல்லிய இன்விட்டேஷன் உனது கண்களிற் தெளிவாக இருந்தது’ அவள் நிதானமாக அவனைப் பார்த்தபடி சொன்னாள். அதற்காக நான் உன்னில் கோபப்படவில்லை என்ற மறைமுக ஆறுதல் அவள் தொனியில் பிரதிபலித்தது.

அவன் மௌனமானான். கொஞ்சம் புத்திசாலியாக இருந்திருக்கக் கூடாதா? தன்னைத்தானே தன் மனதில் திட்டிக் கொண்டான்.

‘சாரி சங்கர் நான் இப்போது உனது வீட்டுக்கு வரமுடியாது’

‘ ஏன் என்ற தெரிந்து கொள்லாமா?’ அவனது ஏமாற்றத்தை, அவமான உணர்வை மறைத்துக்கொண்டு அவன் கேட்டான்.

‘ நாங்கள் இப்போது நல்ல சினேகித்களாகப் பழகுகிறோம்..அப்படியே கொஞ்சக் காலம் இருக்கமுடியாதா?’

அவள் குரலில் ஏதோ ஒரு கெஞ்சல். வாழ்க்கை முழுதும் நல்ல சினேகிதர்களாக இருக்க முடியாதா என்று அவள் கேட்கவில்லை. கொஞ்ச காலம் இப்படியே இருக்க முடியாதா என்று கேட்கிறாள்.

‘ சிந்தியா ஐ லவ் யு’ அவன் பட்டென்று சொன்னான்.அவனையறியாமல் துள்ளி வந்த வார்த்தைகளின் பிரதிபலிப்பு எப்படியிருக்கும் என்று அவன் சிந்திக்கவில்லை. சிந்திக்கும் மனநிலையிலும் இல்லை.

அவன் அப்படிச் சொல்லவேண்டுமென்று கனவிலும் நினைத்திருக்கவில்லை. அநியாயமான மனோகரன் அப்படித்தானே சொல்லச் சொன்னான்ஃ

அப்படிச் சொல்வதற்கான விதை விதைத்த மனோகரனிலும், அதைத் தன் மனதிலிருந்து அகற்றாமலிருந்த தன்னிலும்; அவனுக்குக் கோபம் வந்தது.

அவன் அப்படிச் சொன்னதும் அவள் ஒருதுளியும் பதற்றப் படாமல் அவனை அன்புடன் பார்த்தாள்.

‘சிவசங்கர் லவ் இஸ் வெரி ஸ்பெசியல்’ அவள் கொஞ்ச நேரம் மௌனமானாள். இருவரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொள்ளவில்லை.

அவனுக்கு அங்கிருப்பதே தர்மசங்கடமாகவிருந்தது.

‘காதல் உடம்பின் இணைவு மட்டுமல்ல.. உள்ளங்களின் இணைவு’

உறவுகளை. இணைவுகளை, பாலியல் செயற்பாடுகளை ஆண்களின் பார்வையில், பரிணாமத்தில் பார்த்தும் வழக்கப்படுத்தியும் வந்த கலாச்சாரத்திலிருந்த சிவசங்கர் ஒரு மாணவன் மாதிச் சிலையாக அமர்ந்திருந்த அவள் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தான்.

(தாயகம் -கனடா பிரசுரம்-1.1.1993. இந்தக் கதை ‘ஐ லவ் யு’ என்ற பெயரில் வெளிவந்தது. சில திருத்தங்களுடன் மேற்கண்ட தலையங்கத்துடன் எழுதப் பட்டிருக்கிறது) 

காதல் கதை பகுதி 1

சிவசங்கர் அவளுக்காகக் காத்திருக்கிறான். தன்னைச் சுற்றிய உலகை மறந்து அவளுக்காகக் காத்திருக்கிறான். கடந்த சில நாட்களாக மழை அடிக்கடி பெய்கிறது.அத்துடன் மார்கழிமாதக்குளிர், அவன் அணிந்திருக்கும் உடைகளைத் தாண்டி அவன் எலும்புகளில் உறைகிறது. அவன் தனது கைகளைக்குளிரிலிருந்து பாதுகாக்கத் தன் ஜக்கட் பாக்கட்டுகளுக்குள் புதைத்துக்கொண்டான்.

அவளைப் பற்றிய அவனின் நினைவுகளைப் புதைத்துக்கொள்ள அவனின் உலகத்தில் எந்த இடமுமில்லை.

அவளைச் சந்தித்த நாளிலிருந்து அவள் அந்த இடத்துக்கு வருவதற்;கு நேரம் தவறியதை அவன் அறியான்.

அவன் அவளைச் சந்தித்த நாளிலிருந்து அவள் சரியான நேரத்துக்கு இந்த பஸ் ஸ்டாப்புக்கு வருவது அவனுக்குத் தெரியும்..

இருவரும் ஒருத்தொருக்கொருத்தர் அறிமுகமாகிப் பேசத் தொடங்கி சில மாதங்கள்தானாகின்றன.

அவள் அவனைக் காப்பாற்றச் செய்த உதவிக்கு.அவன் சொன்ன நன்றிக்குப்பின் அவளைக் கண்டால்’ ஹலோ’ சொல்லத் தொடங்கியவன் இன்று அவள் வருகைக்காக் காத்திருக்கிறான்.

அவளின் காதலுக்காகக் காத்திருக்கிறான்

இன்னொருதரம் மழை தூறத் தொடங்கிவிட்டது.அருகிலிருக்கும் பாதாள ட்ரெயினுக்குப் போகிறவர்;கள் அவனைத்தாண்டி முண்டியடித்துக்கொண்டு விரைகிறார்கள்.

‘இவர்கள் யாராவது என்னைப்போல் யாரோ ஒருத்திக்காக எங்கேயோ காத்திருப்பார்களா?’

சிவசங்கர் தன்னைத்தானே கேட்டுக்கொள்கிறான்.

அவன் அவளைச் சந்திப்பதை அவனுக்குத் தெரிந்த இலங்கைத் தமிழர்கள் பார்த்து விடக் கூடாது என்ற அவன் அடிமனம் குறுகுறுக்கிறது.சங்கர் தவிப்புடன் அங்கும் இங்கும் பார்க்கிறான்.

பாதாள ட்ரெயினின் பாதைமுடிவில் ஒரு கிற்றார்வாத்தியக்காரனின் ஜோன் வில்லியத்தின் உருக்கமான ராகம் அவன் மனதை நெருடுகிறது. அவள் வராமலே விட்டு விடுவாளோ?

அப்படி நினைத்ததும் கிற்றார் ராகத்தில் ஏதோ அபஸ்வரம் விழுந்ததுபோல் அவன் மனம் குழம்புகிறது.

அவள் பெயர் சிந்தியா. அது ஆங்கிலப் பெயரா அல்லது ஐரிஷ், ஸ்காட்டிஷ் பெயரா என்று அவனுக்குத் தெரியாது.

‘எனது பெயர் சிந்தியா ஸடிவன்ஸன்’ என்று அவள் தன்னை அறிமுகம் செய்து கொண்டபோது,அது அவனுக்கு ‘இந்தியா’என்ற மாதிரிக் கேட்டது.

அதை அவன் தனது நண்பன் மனோகரனுக்குச் சொன்னபோது அவன் சங்கரை ஏறிட்டுப்பார்த்தான். மனோகரனுக்கு,’இந்திய அமைதிப்படை’ இலங்கைக்கு வந்து செய்த அக்கிரமங்களுக்குப் பின் ‘இந்தியாவைப்’ பிடிக்காது.

‘இந்திய வடக்கத்தியாரை’ அவன் சந்தர்பம் வந்தபோதெல்லாம் வைது முடிப்பான்.

சிந்தியாவின் பெயர்,’இந்தியா’மாதிரி ஒலித்ததால் அவளை ஒரு நாளும் நேரிற் பார்க்காமலேயே அவளைத் தனக்குப் பிடிக்காது என்பதை மனோகரன்; காட்டிக்கொண்டான்.

மனோகரனுக்கு,சிந்தியாவை மட்டுமல்ல,பெரும்பாலான மனிதர்களை மதிக்கவோ அல்லது புரிந்து கொள்ளவோ முடியாத அளவு தலைக்கனம் பிடித்தவன் என்பதை சங்கர் உணர்வான். ஆனாலும் அவர்கள் சினேகிதர்கள். நாட்டை விட்டோட, யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு வந்தபோது சங்கர் மனோகரனைச் சந்தித்தான். அவனும் நாட்டை விட்டோடும் முயற்சிகளில் அலைந்துகொண்டிருந்தான். தான் ஒரு இயக்கத்திலிருந்ததாகவும் இப்போது இவனை எதிரிகள்’போட்டுத் தள்ளத்’ தேடித்திரிவதாகவும் அதனால் நாட்டை விட்டோட அவன் நாயாய் அலைந்து கொண்டிப்பதாகச் சங்கருக்குச் சொன்னான்.

இலங்கையிலிருந்து வெளிநாடு செல்ல, ஏஜென்சிக்காரனைத்தேடி அவனிடம் பணம் கொடுத்து. அதைத் தொடர்ந்து பல விமானங்கள் ஏறி, பல ஆபிரிக்க நகர்கள் கண்டு லண்டன் எயார்போர்ட்டுக்கு வந்ததம் தங்கள் பாஸ்போர்ட்டைக் கிழிந்தெறிந்து விட்டு அகதிகளாக இங்கிலாந்தில் கால்பதிக்கும்வரை ஒன்றாகத்திரிந்தவர்கள்.

இப்போதும் தோழமை, அத்துடன் ஒருத்தருக்கொருத்தரான உதவிக்காக ஒன்றாக வாழ்பவர்கள்.

ஓரு மனிதனின் படிப்பு,படித்தவர்களின் ஆலோசனைகள்,புத்திசாலிகளுடனான நட்பு என்பன அவனின் சிந்தனையைச் சீராக்குகின்றன என்பது சிவசங்கரனுக்குத் தெரிந்தாலும் தன்னுடன் வாழும் மனோகரனின் பிற்போக்குத்தனமான சிந்தனைகளைப் பெரிதுபடுத்தாமல் வாழப் பழகிக்கொண்டான்.

லண்டனில் வந்திறங்கி புதிய சூழ்நிலை, புதியவாழ்க்கைமுறைகளைக் கிரகிக்க மிகவும் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும்போது தன்னுடன் வந்த,கிட்டத்தட்டத் தன்னை மாதிரியே லண்டன் அனுபமுள்ள மனோகரனைத் தவிர்த்துக்கொள்ள சங்கர் விரும்பவில்லை.மனோகரனின் பெண்கள் பற்றிய அல்லது தமிழ்த்தேசியம் பற்றிய வியாக்கியானங்கள் எரிச்சலைத் தந்தாலும் அவற்றைப் பொறுக்கப் பழகிக்கொண்டான்.

சிந்தியா சிவசங்கரனின் வாழ்க்கையில் நுழைந்தபோது சங்கருக்;கு அந்த புதிய அனுபவம் ஒரு புத்துணர்வைத் தந்தது. மனோகரனிடமிருந்து மனதளவில் தப்ப ஒரு வழிவந்தது அவனுக்குச் சந்தோசமாகவிருந்தது.

அவளைக் கண்டதும் பழகத் தொடங்கியதும் கனவுபோலிருக்கிறது.

லண்டனுக்கு வந்த நாளிலிருந்து, லண்டனின் மத்தியிலுள்ள ஒரு சீக்கிய முதலாளியின் கடையில் வேலை செய்கிறான்.இலங்கையில் பெரிய படிப்பு படிக்காத பையன்கள்செய்யும் கடையில் எடுபடிசெய்யம் வேலையை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் படித்த படிப்பை, சிங்கள அரசின் கெடுபிடியால் அரைகுரையாக முடித்துக்கொண்டு, உயிர் தப்ப நாட்டை விட்டோடி வந்த சங்கர் செய்கிறான்.

சுpவசங்கர் ஒரு சாதாரண ஆசிரியரின் மகன். அரசியல் என்று அலையாமல் பல்கலைக்கழகத்தில் தனது எதிர்கால மலர்ச்சியைக் கனவு கண்டுகொண்டு படிக்கும் காலத்தில், அவன் ஏதோ ஒரு இயக்கத்திலிருப்பதாக அரசாங்க புலனாய்வுத் துறைக்கு யாரோ ‘அள்ளி வைக்க’ அவனும் உயிரைக் காப்பாற்ற, பெற்றோர் உற்றோரைவிட்டு ஓடவேண்டி வந்தததை அவளுக்குச்; சொன்னான்.

அப்பாவின் உபதேசம், அம்மாவின் அழுகை சகோதரிகளின் நகைகள் எல்லாம் சேர்த்து அவனை லண்டனுக்கு அனுப்பி வைத்திருக்கிறது.

குடும்பப்பொறுப்பும் ஏஜென்சிக்காரனுக்குக்கொடுக்கவேண்டிய கடனும் கொடுக்க அவன் மாடாக உழைத்தான்.சீக்கிய முதலாளி ஒருநாளைக்கு அவன் செய்யம் பன்னிரண்டு மணித்தியால வேலைக்கு பதினைந்து பவுண்ஸ்கள் தருவதாகச் சொன்னபோது, ஆறுநாள் வேலைக்குத் தொண்ணூறு பவுண்ஸ்கள் கிடைத்தால், அதில் வாடகைக்கும் சாப்பாட்டுக்கும் நாற்பது பவுண்ஸ்கள் போனாலும் ஐம்பது பவுண்ஸ்கள் மிச்சம் பிடித்து எப்படியும் கடன்களை கொஞசம் கொஞசமாக அடைக்கவேண்டுமென்று கஷ்டப்பட்டான்;.

வாழ்க்கையில் எத்தனையோ கஷ்டப்பட்டு உயிர் தப்பிவரும் இலங்கைத் தமிழ் இளைஞர்களைச் சுரணடும் இந்திய முதலாளியை மனோகரன் வழக்கம்போல் திட்டித் தீர்த்தான்.

சீக்கிய முதலாளியின்; கடை, லண்டனின் மத்தியிலிருக்கிறது.உல்லாசப் பிரயாணிகளுக்கக் கவர்ச்சியான பொருட்களை விற்கும் கடை. ஓரே பிசியாகவிருக்கம். சங்கரின்வேல. பெட்டிகளில் வரும் சாமான்களை எடுத்து அடுக்கி வைப்பதாகும். பெரிய பெட்டிகளைத் தூக்குவதும் அடுக்குவதுமான கஷ்டமான வேலை செய்து விட்டு முதுகு வலியுடன் வீட்டுக்கு வரும்போது, எப்படி எனது கடனை அடைக்கப்போகிறேன் என்று அவன் பெருமூச்சு விடுவான்.

இப்படியான இயந்திர வாழ்க்கை வாழ்வதில் எந்த அர்த்தமும் இருப்பதாக அவனுக்குத் தெரியவில்லை.

அவன் பல்கலைக்கழக மாணவனாக இருந்த காலத்தில்,படித்து ஆளாகி, குடும்பத்தைக் கரையேற்றியபின் தான் ஒரு (அழகிய) பெண்ணைத் திருமணம் செய்து சந்தோசமாக வாழவேண்டுமென்ற பெரும்பாலான இளைஞர்களைப் போலப் பல கற்பனைகள் செய்தான்.அவையெல்லாம் லண்டன் வந்து ஒரு கடையில் வேலைசெய்யும்போது தகர்ந்து விட்டதாக உணர்ந்தான்.

‘ போடா மடையா, இலங்கையில படித்துப் பட்டம் பெற்றாலும் அவர்களுக்கு பெண்கொடுக்காத பெரிய பணக்காரர்கள் லண்டனில் வாழும் மாப்பிள்ளை என்ன வேலை செய்தாலும் பரவாயில்லை என்று இலட்சக்கணக்கில் சீதனம் கொடுத்துத் தங்கள் அழகிய பெண்களை திருமணம் செய்து கொடுக்க விழுந்தடித்து முன்வருகிறார்கள்’ மனோகரன் பெருமையுடன் சொன்னான்.

சுpவசங்கரனோ முன்பின் தெரியாத பெண்ணைச் சீதனத்துக்காகத் திருமணம் செய்வதில்லை என்று சொன்னபோது மனோகரன் ஓஹோ என்று சத்தம்போட்டுச் சிரிக்கத் தொடங்கிவிட்டான்.

‘ நீ வாழத்தெரியாத ஒரு முட்டாள்’ என்று சிவசங்கரைச் சீண்டினான் மனோகரன்.

மனோகரன் இப்படிப் பேசும்போது தனது கோபத்தை மிகக் கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டான் சிவசங்கர்.

(தொடரும்)

ஆவணப்படம்

தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி பார்த்தேன். கங்கை ,மற்றும் அதன்கரை ஓரப் பகுதிகளின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவலர்களைப் பற்றின ஆவணப் படம் என்று ஞாபகம். கங்கையில் பயணம் செய்து கொண்டிருந்த போது தற்கொலை செய்து கொள்ள முயன்ற ஒரு பெண்ணைக் காப்பாற்றி அவளிடம் விசாரணை செய்து கொண்டிருந்த தருணத்தில்தான் பார்க்க ஆரம்பித்தேன்.அதற்குள்நல்ல உலர்ந்த ஆடைகளைக் கொடுத்து, உணவையும் கொடுத்து ஆசுவாசப்படுத்தி அவளிடம் கனிவாக கேள்வி கேட்டு கொண்டிருந்தார்,ஒரு வயதான காவலர்.உருண்டை முகமும்,வழுக்கைத் தலையும் ,பரிவான கண்களும்,சரிந்த தொப்பையுமாக ஒரு அன்பான அப்பா மாதிரி இருந்தார் அவர். அந்தப் பெண் நம் தேசத்திற்கே உரிய அழகிய தாமிர நிறமும் ,வட்ட முகத்தில் பெரிய செந்நிற குங்கும பொட்டும் , கரிய, பெரிய கண்களுமாக,அழகி என்றே வரையறுக்கலாம் போல இருந்தாள் . தலையை அசைத்து அவள் பேசுகிற விதத்தில் ,கண்ணில் வரம்புகட்டி நின்ற கண்ணீரும்,ஒற்றைக்கல் மூக்குத்தியும் மாறி மாறி பளிச்சிட்டன.அந்த கங்கைக்கரை ஓரப் பெரு நகரத்திலிருந்து இரண்டு மணி நேர பயண தூரத்தில் இருந்த ஒரு கிராமத்தைச் சேர்ந்தவள் அந்தப் பெண்.
“வீட்டில் யார் யார் இருக்காங்கம்மா?”
“என கணவர்,இரு குழந்தைகள்,மாமனார் ,மாமியார்”
“அவங்களால ஏதாவது பிரச்சனையா?”
“இல்ல ,இல்ல,என் கணவர் நல்லவர்,என் மாமனார்,மாமியார் ரொம்ப அன்பானவங்க.குழந்தைகளும் தங்கம்.இவங்களை பற்றி நான் ஏதாவது தப்பா சொன்னா நரகத்துக்குத்தான் போவேன் “, புடவைத் தலைப்பால்கண்களை துடைத்துக் கொண்டாள்.
“பின்ன உனக்கு என்னம்மா கஷ்டம் ?”
கசந்த சிரிப்போடு சொன்னாள் ” இந்த உலகத்தில, எந்த தேசத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி,எந்த பொருளாதார வர்க்கத்தைச் சேர்ந்தவங்களா இருந்தாலும் சரி, நூத்துக்கு,தொண்ணூற்று ஐந்து சதவீதம் பெண்கள் வாழ்க்கையில் கஷ்டம்தான் படறாங்க.நான் மட்டும் எப்படி விதிவிலக்காக இருக்க முடியும் ?”
அவர் பொறுமையாக காத்துக் கொண்டிருந்தார், அவள் தன்னைத்தானே ஆயத்தப்படுத்திக் கொள்ளும் வரை.
“நான் சமஸ்கிருதத்தில் இளங்கலை பட்டதாரி , என் கணவருடைய படிப்பும் அதேதான். எங்க இரண்டு பேருக்குமே வேலை இல்லை . கிராமத்தில இருக்கற பள்ளிக்கூடத்தில் தாற்காலிக வேலை கொஞ்ச நாள்கிடைச்சுது ,அந்த மூணு நாலு மாசம் வாழ்க்கை பரவாயில்லாம போச்சு .அதுக்கப்பறம், ஒவ்வொருநாளும் போராட்டம்தான். குழந்தைகளுக்கு கூட ஒரு வேளை சாப்பாடு ஒழுங்கா போட முடியலை . பெரியநகரங்களுக்கு வந்து வேலை தேடலாம்னு நினைச்சா பயமா இருக்கு.கிராமத்திலாவது ஓட்டையோ,ஒடைசலோ ஒரு வீடு இருக்கு தங்க.யாராவது இரக்கப் பட்டு குழந்தைகளுக்காவது சாப்பாடுபோடுவாங்க.எங்க படிப்புக்கு வாத்யார் வேலையைத் தவிர என்ன வாய்ப்பு இருக்குன்னு தெரியலை. எத்தனையோ எழுதிப்போட்டாச்சு. ஒண்ணும்கிடைக்கலை.
நிகழ்காலம்,எதிர்காலம் எல்லாமே இருட்டாக இருக்கு. வேலைக்கு முயற்சி பண்ணப் போறேன், சாயங்காலம் வந்துடுவேன்னு சொல்லிட்டு வந்தேன். படகில் ஏறி உட்கார்ந்தேன்,மனம் முழுக்க குழப்பம் ,கவலை.நான் போய் சேர்ந்தாலாவது,அவங்களுக்கு ஒருவழி பிறக்குமா, அல்லது ஒரு சுமையாவது குறையுமான்னு நினைச்சேன், டக்னு கங்கையிலே குதிச்சேன்.”
பேச ஆரம்பிக்கும் போது அந்த காவலரின் கண்களை பார்த்து பேசியவள் , முடிக்கிற சமயத்தில்,தலையைக் குனிந்து கொண்டு தன் கைகளை பார்த்து கொண்டு குரல் தழைந்தாள்.
“ஏம்மா! நீ செத்துப் போயிட்டா, பிரச்னை தீந்து போயிடுமா?பிரசனையை பார்க்க நீ இருக்க மாட்டே,அவ்வளவுதான்.பிரச்னை அப்படியே தான் இருக்கும், என்னைக கேட்டா இன்னும் கொஞ்சம் ஜாஸ்தியாவே இருக்கும்.உன் குழந்தைகள் கதி என்ன?வயசான ,அன்பான உன் மாமனார்,மாமியாரை இன்னும் பெரிய கஷ்டத்தில ஆழ்த்தற இல்லயா? உன் துணை இல்லாமல் உன் கணவர் இவ்வளவு பெரிய பிரச்னையை எப்படி எதிர் கொள்வார் ?வாழ்க்கை இப்படியே போயிடாது. நிச்சயம் ஏதாவது விதத்தில்,உனக்கு வழி பிறக்கும். இப்போ ஊருக்குப் போ!உன்னோட ஒரு போலீஸ்காரரை அனுப்பறேன். தைரியமா போ,ஏதாவது உனக்கு பொருத்தமான வேலை பற்றி எனக்கு தெரிய வந்தால் உனக்குத் தகவல் அனுப்பறேன் . ” தலையை வருடிக்கொடுத்து சமாதானம் சொல்கிற ஒரு அப்பாவின் வாத்ஸல்யம் அவர் குரலில்.
“சரி! ஒரு வாக்குமூலம் எழுதிக்கொடுத்தட்டு போ!”
அவளிடம் தாளையும் பேனாவையும் கொடுத்தார் .”என்ன எழுதப் போற?”
அவள் மெல்லிய குரலில் “இந்த மாதிரி தற்கொலை பண்ண பார்த்தேன், காவலர்களால் காப்…..”
அவர் அவளை அவசர அவசரமாகத் தடுத்தார் “இல்லம்மா,அப்படி எழுதாத, தற்கொலை முயற்சி தண்டனைக் குரிய குற்றம். ( பத்து வருடங்களுக்கு முன்பு)உனக்கு இருக்கற கஷ்டத்தில, அது வேற தேவையா?இப்படி எழுது, என் பிரச்னையை பற்றி யோசித்து கொண்டே உட்கார்ந்திருந்தேன். கங்கை ஜலத்தை கையால் தொடுவதற்காக படகின் ஓரத்துக்கு வந்த போது கால் தடுக்கி, நதியில் விழுந்து விட்டேன். நல்ல வேளையாக படகில் இருந்தவர்களின் அலறலைக் கேட்டு காவலர்கள் என்னைக் காப்பாற்றினார்கள். இப்படி எழுதிக்கொடு”
அதற்கப்புறம் நடந்த எதையும் நான் கவனிக்கவில்லை. அந்தப்பெண்ணையும், அந்த காவலரையும பற்றி நினைக்க நினைக்க ஒரு புறம் வாழ்க்கையின் மகத்தான தருணங்கள்,எவ்வளவு எளிமையான விஷயங்களில் வெளிப்படுகிறது என்று தோன்றியது, மறுபுறம் என் வீட்டின் சௌகரியமான சூழ்நிலையில் உட்கார்ந்து கொண்டு, நல்ல மனிதர்கள் எங்கேயும் இருக்கிறார்கள்,நம்மால் ஒன்றும் முடியாவிட்டாலும் இவர்களின் துக்கத்தைப் புரிந்து கொண்டு அனுதாபமாவது பட முடிகிறதே என்று என் முதுகில் நானே தட்டிக்கொள்வது ஒரு வகையான தப்பித்தல் என்று குற்ற உணர்ச்சி உறுத்தியது. உலகத்தில் 95% சதவீதம் பெண்கள் வாழ்க்கையில் சோகத்தைதான்அனுபவிக்கிறார்கள் என்று அந்தப்பெண் சொன்ன கணத்தில் எனக்கு தூக்கி வாரிப் போட்டது. எங்கோ ஒரு குக்கிராமத்தில் உட்கார்ந்து கொண்டு இவளால் உலகப்பெண்களின் துக்கத்தை எங்ஙனம் உணர முடிந்தது?
வெறும்பேச்சுக்கு சொன்னதா? இல்லை அவளின் நுண்ணுணர்வு,படிப்பறிவு ,பட்டறிவு இவற்றின் வாயிலாக அவற்றை உண்மையாக அறிந்து கொண்டு சொன்னதா? எதுவாக இருந்தாலும், இவ்வளவு தெளிவாக பேசுகிற பெண்ணுக்கு, குறைந்தபட்சம் வாழ்க்கையின் அடிப்படை தேவைகளை மட்டுமாவது பூர்த்தி செய்யக்கூடிய ஒரு வேலையைக் கூடத் தர முடியாத இந்த சமூகத்தை நினைத்து ஒரு வித அச்சமும், நம்பிக்கையின்மையும் ஏற்பட்டன.”
பிரபல பெண்கள் மாத இதழுக்காக இந்தக் கட்டுரையை அவள் கணினியில் அடித்துக் கொண்டிருந்த வேளையில் வாசல் கதவு தடாலென்று திறக்கிற சத்தம்,
” அறிவு இருக்கா உனக்கு? ஏன் கதவு உள் தாழ்ப்பாள் போடாம இருக்கு? எவனாவது உள்ள புகுந்து இருக்கறத எல்லாம் சுருட்டிண்டு போனாலும் உனக்கு புத்தி வராது, ஏன்னா நஷ்டம் எனக்குத்தானே, உனக்கென்ன போச்சு ? உன் அப்பன் வீட்டு காசா என்ன?” கத்திக்கொண்டே சோஃபாவில் உட்கார்ந்து கொண்டு காலணிகளைக் கழற்றினான்.
நேற்று கதவு தாழ் போட்டதற்காக கத்தியது நினைவுக்கு வந்தது,
“நான் வர டயம் தெரிந்தும் ஏன் கதவ தாழ்ப்பாள் போட்டு வச்ச? நான் கதவைத் தட்டி வெயிட் பண்ணி கஷ்டப்படறதைப் பாக்கணும்னு உனக்கு கெட்ட எண்ணம்!”
அதைச் சொல்ல முடியாது, சொன்னால் இன்னும் கத்துவான்.
” எது சொன்னாலும் பதிலே பேசாம கழுத்தை அறு!! உன்னை என் தலையில கட்டிட்டு உன் அப்பன் அவன் பாட்டுக்கு ஜாலியா இருக்கான்,இங்க அவஸ்தைபடறது நான்!”
அப்பா பாவம்! அவர் என்ன தப்பு பண்ணினார் இந்த கல்யாணம் பண்ணினதைத்தவிர ,இந்த கல்யாணம் நடந்ததைப் பற்றி அவரே ஒவ்வோர் நாளும் வேதனப்பட்டுக் கொண்டிருக்கிறார்.
“காஃபி கொண்டு வரவா?”
“ஏன் அதக் கொண்டு வர ஜோஸியரப் பாக்கணுமா?கொண்டா சீக்கிரம்! சரியான மச மசப்பு கேஸ்!”
அவனுக்கு வாழ்க்கையோடும் அவளோடும் என்ன பிரச்னை என்று புரிந்து கொள்ள அவள் மேற்கொண்ட முயற்சிகள் பயனளிக்கவில்லை. கல்யாணமான புதிதில் ஏற்படுகிற தயக்கமும் ,பழகியபின் ஏற்படுகிற உரிமையும் இல்லாத ஒரு இடைப் பட்ட காலத்தில் அவனிடம் ஒரு முறை கேட்டாள் ,
“நமக்குள்ள என்ன பிரச்னை ? நாம் ஏன் ஒத்தரொட ஒத்தர் பேசி புரிஞ்சுக்க முயற்சி செய்யக்கூடாது?”
அவள் ஏதோ புரியாத மொழியில் பேசியது போல் ஒரு நிமிடம் மலங்க மலங்க பார்த்தான். பிறகு அது தனக்கு ஒரு தோல்வி போல உணர்ந்து கத்த ஆரம்பித்தான்.
” இத பாரு! ஏதாவது நாலு புஸ்தகத்தைப் படிச்சுட்டு எங்கிட்ட உளர்ற வேலை எல்லாம் வச்சுக்காத!”
அவளுக்கு நிஜமாகவே ரொம்ப ஆச்சரியமாக இருந்தது, இங்கே வீட்டில் மூச்சு முட்டித்தவிக்கிற மனம், வேலைக்குச் செல்லும்போது எவ்வளவு விடுதலையாகவும், எவ்வளவு குதூகலமாகவும் உணர்கிறது. அது தப்பித்துக் கொள்ள ஒரு இடம் கிடைத்த ஆசுவாசம் மட்டுமல்ல, தன்னைத்தானாகவே அறிகிற சுகம், தனக்குப் பிடித்த முகத்தை, அணிந்து கொள்வதில் உள்ள சௌகர்யம், அவளை எந்த நிபந்தனைகளும் இல்லாமல் அங்கீகரிக்கிற நட்பு. அவள் அங்கு நகைச்சுவை உணர்ச்சியும் ,குறும்பும், சந்தோஷமும், சகமனிதநேயமும் ,தோழமையும், அனைவருக்கும் பரிந்து உதவுகிற கருணையுமாக இருந்தாள் .இங்கே தன் வீடு என்ற உணர்வே இல்லாத இடத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறேன் நான் என்ற கேள்வியோடு சமையலறைக்குள் சென்றாள் .
அவன் தொலை பேசியில் பேசிக் கொண்டிருந்தான்.
” இல்லை தனஞ்சய்! கவலைப்படாதே ! நீ மட்டும் செய்த தவறு என்று எண்ணாதே! நாம் எல்லாம் ஒரு குழு! நாம் அனைவரும் சேர்ந்து இதற்கு தீர்வு என்ன என்று கண்டு பிடிப்போம் ! என் அருமையான பையா! கவலைப்படாமல் தூங்கு!! ” கட கடவென சிரித்தபடியே திரும்பியவன் அவள் அந்த அறைக்குள் நுழைந்ததைப் பார்த்து “உச்!! ” என்ற எரிச்சலுடன் அடுத்த அறைக்குப் போனான்.
உண்மையிலேயே இவன் யார்? தன் அலுவலக நண்பர்களிடம் இவ்வளவு தன்மையாகப் பேசும் இவன் தன்னிடம் மட்டும் ஏன் இப்படி?
விடை தெரியாத கேள்விகள்!!
இந்த இருபது வருட மண வாழ்க்கையில் அவன் தன்னுடன் பேசியதை எழுதினால் இரண்டு பக்கம் கூட வராது என்று எண்ணினாள்.( முட்டாள்,மக்கு, சோம்பேறி போன்ற திட்டுக்கள், சண்டைகள் தவிர சாதரணமாக பேசியவையை கணக்கில் எடுத்துக் கொண்டால் ). அது கூட அருணைப் பற்றின ஏதோ ஒன்றிரண்டு விசாரணைகள்,அவன் வாழ்வின் முக்கிய தருணங்களான பள்ளி இறுதி வகுப்பு,கல்லூரி சேர்க்கை என்பவற்றின் போது மட்டுமே.
சில சமயம் அலுவலக விஷயமாகவோ,தனிப்பட்ட முறையிலோ வெளியூர்களுக்குச் சென்று விட்டு திரும்புகிற சமயத்தில் ,அவன் ஹாலில் உட்கார்ந்து டி.வி பார்த்துக் கொண்டிருப்பான் ,அல்லது தினசரி படித்துக் கொண்டிருப்பான் .இவள் பெரிய பெட்டியை தூக்க மாட்டாமல் தூக்கிக்கொண்டு பயணக்களைப்பில் உள்ளே நுழைகையில் ஒரு வினாடிக்கும் குறைவான நேரம் யார் வருவது என்று பார்த்துவிட்டு பின்னர் தான் செய்வதைத்தொடர்வான்.ஊர்களுக்குப் போவதோ, உறவினர்வீட்டு விசேஷங்களுக்குப் போவதோ,கடைகளுக்கோ, உ டம்பு சரியில்லாமல் போகும்போது மருத்துவ மனைக்கோ,வங்கி வேலைகளுக்கோ,வீடு சம்பந்தமான வேலைகளுக்கு அரசாங்க அலுவலகங்களுக்கோ எல்லா இடத்துக்கும் தனியாகத்தான் போவாள்.போய்வந்து பிறகும் ஒரு வார்த்தை ,ஒரு கேள்வி,ஒரு பார்வை கிடையாது .இப்படித்தான் எல்லார் வாழ்க்கையும் இருக்கிறது என்று அவள் நம்பத் தயாராக இல்லை.
அவன் சாப்பிட்டு விட்டு தொலைக் காட்சியைப் பார்க்கப் போய் விட்டான். இவள் சாப்பாட்டு மேஜையை சுத்தம் செய்து கொண்டே யோசித்தாள்,சில வருடங்களுக்கு முன் படித்த ஒரு பெண்மணியின் வாழ்க்கைச் சம்பவம் நினைவுக்கு வந்தது.
அந்தப்பெண்மணியும் , அவள் கணவரும் பதினைந்து வருடங்கள் குடும்பம் நடத்திய பிறகு கணவர் எதிர்பாராத விதமாக இறந்து விடுகிறார் .இருந்த இத்தனை வருடங்களில் அவளுடன் அவர் சுத்தமாக பேசியதேயில்லை. வீட்டிற்கு சாப்பிடுவதற்கும்,தூங்குவதற்கும் மட்டும் வருவார்.மற்றபடி வேலை,
நண்பர்கள் என்று மட்டுமே வாழ்ந்து இருக்கிறார். அவர் எப்படிப்பட்டவர் என்பதற்கான எந்த அபிப்ராயமும் அவளுக்கு இல்லை.அவர் திடீரென இறந்ததும்,வீட்டுக்குத் திரண்டு வந்த நண்பர்கள் பேச்சில் தென்படுகிற அவரின் குணாதிசயத்தைக் கேட்க கேட்க , அவளுக்கு சந்தேகம் வருகிறது ,தான் திருமணம் செய்து கொண்ட மனிதரும், இவர்கள் தங்கள் நண்பர் என்று சொல்கிற மனிதரும் ஒருவர்தானா என்று.
கடவுள் போட்ட முடிச்சு, பூர்வ ஜென்ம கர்ம பலன்,பெற்றோர்கள் அறியாமல் செய்த பிழையான முடிவு ,ஏதோ ஒன்றோ , அல்லது எல்லாமோ அவளை இந்த மூச்சுத் திணற வைக்கும் உறவில் மாட்டி வைத்தது என்றால் இதிலிருந்து தப்பிக்க அவள் ஏன் எந்த முயற்சியும் செய்யவில்லை ?
தான் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு போகிற பொறுமைசாலி என்று உலகுக்கும்,குறிப்பாக தனக்கும் காட்டிக் கொள்ளும் அசட்டு வீராப்பா?
இல்லை ,தன்னைத்தானே வதைப்பதில் சுகம் காணும் சுய வதை இன்ப வாதியா?
இல்லை, காலம் காலமாக போற்றி வருகிற குடும்ப பாரம்பரியம்,பண்பாடு இவைகளை மீறுவதில் உள்ள பயம் கலந்த தயக்கமா?
இல்லை ,இந்த விஷயங்களில் ஒரு பத்து சதவீதம் அளவாவது பகிர்ந்து கொண்ட தோழி சங்கீதாவிடம் சொன்னது மாதிரி
” என்கிட்ட எப்பிடி இருந்தாலும் என் குழந்தையிடம் அன்பாக இருக்கிற அப்பா! அந்த குழந்தைக்கு அப்பாவின் அன்பை வஞ்சனை செய்ய விரும்பவில்லை ”
” ஆனா யோசித்துப் பாரு! ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அன்போ,நட்போ, குறைந்த பட்ச புரிதலோ இல்லாத இந்த உறவைப் பார்க்கையில் ,இதோடு வாழ்கையில் அவன் புண் பட மாட்டானா?” சங்கீதா ஆதங்கத்துடன் கேட்டாள் .
” ஒரு உடைந்த வீடு குழந்தையை எவ்வளவு பாதிக்கும் தெரியுமா? என் சுய நலத்துக்காக அந்த கஷ்டத்தை அவனுக்கு குடுக்கணுமா?”
“ரொம்ப சரி! ஒத்துக்கறேன்!ஆனா ஒரு பக்கம் வெறுப்பு ,துவேஷம்,அலட்சியம்,அவமரியாதை,இன்னொர பக்கம் கழிவிரக்கம்,பயம்,அவமானம்,துக்கம் ,இப்படி இருக்கிற இருவரைப் பார்க்கையில் ஆண் பெண் உறவு பற்றி எப்படிப்பட்ட கசப்பு உணர்ச்சியும் ,அவநம்பிக்கையும் அவனுக்கு உண்டாகும் தெரியுமா? நீ
அவனுக்குச் செய்கிற மிகப் பெரிய தீங்கு, இந்த உறவு என்பது எவ்வளவு குரூரமானது,நம்பத் தகாதது என்கிற உணர்ச்சியை அவனுக்குத் தருவதுதான் ” சங்கீதா சொன்னாள் .
“இருபது,முப்பது வருடங்களுக்கு முன் இந்த உறவு முறிவு எண்ணத்தகாதது. இந்த காலத்தில் இப்படி ஒரு மரண வாழ்க்கை வாழத் தேவையில்லை, ஆனா உன் வாழ்க்கை பற்றின முடிவை நீதான் எடுக்கணும்.”
குரலில் வருத்தம் தோய சொல்லி முடித்தாள்.
இயந்திர கதியில் சமையலறையைச் சுத்தம் செய்து ,பாத்திரங்களைத் தேய்க்க போட்டு, மறுநாள், சமையலுக்கு ஏற்பாடாக எல்லாவற்றையும் எடுத்து வைத்து விட்டு வெளி வருகையில் ,அவன் அவனுடைய அறைக்குள் போகும் சத்தம் கேட்டது.அவள் தன் அறையை நோக்கி நடந்தாள்.
யோசிக்க யோசிக்க மண்டையே வெடித்துவிடும் போல இருந்தது . ஆனால் உண்மையிலேயே சங்கீதாவின் கேள்விக்கு என்ன பதில்? இந்த நரகத்தை விட்டுப் போக நான் ஏன் தயங்குகிறேன்?
சட்டென்று இந்திரா பார்த்தசாரதியின் ஏதோ கதையின் வரிகள் நினைவுக்கு வந்தன.” சொர்க்கத்தைத் துறந்து நரகத்துக்கு போவது மட்டும் துறவு அல்ல , நரகத்தை விட்டு சொர்க்கத்திற்குப் போவதும் ஒரு வகைத் துறவு தான்”
கணினியை உயிர்ப்பித்து பெண்கள் இதழுக்காக எழுதிய கட்டுரையைத் திறந்தாள். அந்த துறவுக்கான மனத்திண்மை தனக்கு இல்லை,அவ்வளவுதான் என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள்