Sunday, 24 July 2016

காதல் கதை பகுதி 2


(மனோகரன் இப்படிப் பேசும்போது தனது கோபத்தை மிகக் கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டான் சிவசங்கர்.)
முன்கதை  படிக்க பகுதி 1
எப்படியும் உழைத்துத் தன் பொறுப்புக்களைத் தீர்த்துவிட்டுச் சுதந்திரமாக வாழ தன்னால் முடியுமட்டும் கடினமாக உழைத்தான் சிவசங்கர்.அவன் ஒருநாள் வேலையால் களைத்துப்போய், வீட்டுக்கு வருவதற்கு பஸ் ஸ்டாப்பில் காத்திருக்கம்போது,’ஹலோ பிரதர்’என்று சொல்லிக்கொண்டு மூன்று கறுப்பு இளைஞர்கள் அவனை வளைத்தார்கள்.அவனுக்குப் பயத்தில் வயிற்றில் புழு நெழியத் தொடங்கி விட்டது.
ஆசிய நாட்டு மக்கள் தங்க நகை அணிந்துகொண்டு திரிபவர்கள் என்று கறுப்பு,வெள்ளையினக் குண்டர்கள் அவர்களைக் கொள்ளையடிப்பது லண்டனில் அடிக்கடி நடக்கும் விடயமாகும்.
வந்திருந்த மூவரில் ஒருத்தன், ஏதோ தான் வாங்கிக்கொடுத்த செயினைத் தடவுவதுபோல் சங்கரின் கழுத்தைத் தடவி அவன் போட்டிருந்த தங்கச் சங்கிலியை இழுத்தான். அது அவனின் அம்மா பிள்ளையார் பதக்கத்துடன் மகனுக்குப் போட்ட சங்கிலி. கறுப்புக் கொள்ளைக்காரன் கையில் பிள்ளையாhரின் பதக்கம் பதித்த சங்கிலி பளபத்தது.
இன்னொருத்தன் சங்கரின் மாமா பரிசாகக்கொடுத்த விலையுயர்ந்த கைக்கடிகாரத்தைத் தன்னுடைய மணிக்கட்டில் கட்டிக்கொண்டான். மற்றவன் அவனது ஜக்கட் பாக்கட்டுக்கள்ளிருந்து அவனது பர்சை எடுத்தான்.நேரம் இரவு பத்து மணி. அவர்கள் கொள்ளையடிப்பது மட்டுமல்ல, மிகக் கொடுமையாகத் தாக்குபவர்கள் என்றும் பத்திரிகைச் செய்திகளில் வரும். மோசமாகத் தாக்கப்பட்டு இந்த வழிப்பறிக் கொள்ளையர்களால் உயிரிழந்த சிலருமுண்டு.
அவன் கையில் அவனது மாமி போட்ட மோதிரத்தைக் கழட்ட அவர்கள் சிரமப்பட்டார்கள்.அவன் விரலில் இறுக்கமாக மோதிரம் போட்ட குற்றத்திற்காக அவன் முகத்தில் ஒரு குத்து விழுந்தது.
அவர்கள் எதையாவது எடுத்தாலும் பரவாயில்லை, தன்னை உயிருடன் விட்டாற்போதும் என்ற சங்கர் கடவுளை வேண்டிக்கொண்டான்.
இத்தனை நிகழ்ச்சியும் ஒரு சில நிமிடங்களில் நடந்து முடிந்து விட்டது.
அப்போது சட்டென்ற இரு போலிஸ் கார்கள் இருபக்கத்தாலும் வந்து அந்தக் கறுப்புக் கொள்ளைக்காரர்கள் தப்பி ஓடாதவாறு வளைத்தது. படபடவென சில போலிசார் இறங்கினார்கள். கறுப்பு இளைஞர்கள் இந்த அதிரடிப் போலிசாரின் வருகைiயால் கலங்கிவிட்டார்கள். போலிசார் ‘உனக்கு என்ன நடந்தது?’ என்ற சங்கரைக் கேட்டார்கள்.
அவன்,அவர்கள் அவனிடமிருந்து பறித்தெடுத்த அம்மா போட்ட பிள்ளையார் பதக்கமுள்ள தங்கச் செயின், மாமா தந்த கைக்கடிகாரம், பர்சிலிருந்து எடுக்கப்பட்ட இந்த வாரச்சம்பளம், அதில் சரியாக எவ்வளவு இருக்கிறது என்பது பற்றிய எல்லாவற்றிற்கும் சரியான விளக்கம் சொன்னான்.
போலிசார் வழிப்பறியாளர்களைச் சோதனை போட்டபோது அவன் குறிப்பிட்ட அத்தனையையும் எடுத்தார்கள். அத்தனையையும்,அவர்களின் விசாரணை முடிந்ததும் போலிஸ் ஸ்ரேசனினுக்கு வந்து எடுக்கலாம் என்ற சொல்லிவிட்டுப் போலிசார் வழிப்பறிசெய்தவர்களைத் தங்கள் போலிஸ்; காரில் ஏற்றிக் கொண்டுபோனார்கள்.
அடுத்த நாள் பயத்துடன் அதே பஸ் ஸடாப்புக்கு வந்தபோது,’ஹலோ’ என்று தன்னையழைத்தபெண்ணைப் பார்த்தான் சங்கர்.அவளை இந்த நேரத்தில் எத்தனையோதரம் இந்த பஸ் ஸடாப்பில் கண்டிருக்கிறான்.
அவன் இரவு பத்து மணிவரைக்கும் வேலை செய்து விட்டு வரும்போது அவளும் வருவாள்.
அவள் எங்கே வேலை செய்கிறாள் என்ற அவனுக்குத் தெரியாது.
அவன் லண்டனுக்கு வந்து சொற்ப மாதங்களே. அதனால் பல விடயங்களை இப்போதுதான் புரிந்து கொள்ளத் தொடங்கியிருக்கிறான்.
அவள் அந்தப் பகத்தில், எங்கு,என்ன வேலை செய்கிறாள் என்று கேட்க அவனுக்குத் துணிவில்லை. அவன் வேலை செய்யும் கடைக்கு வரும் வெள்ளையினப் பெண்களுடன் ஏதோ ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசியதைத் தவிர அவனுக்குப் பெண்களுடன் பழகிய அனுபவமில்லை.
‘எனது பெயர் சிந்தியா ஸடிவன்சன்’ அவள் தன்னை அறிமுகம் செய்தகொண்டாள்.
அவள் அழகான பெண் என்று அவனுக்குத் தெரியும். அடக்கமாக உடுத்திருப்பாள் பெரும்பாலான ஆங்கில இளம்பெண்கள்போலல்லாது மிகவும் அமைதியான பெண்ணாகத் தெரிந்தாள்.அவள் தன்னுடன் வலிய வந்தபேசியது அவனுக்கு ஆச்சரியமாகவிருந்தது.
அவன் தன் பெயரைச் சொன்னான்.
‘இரவில் இந்தப் பக்கத்தில் கவனமாகத் திரியவேணும்.. நல்லகாலம் நேற்று போலிசார் பக்கத்தில் ரோந்து போனதால் நீங்களும் உங்களது உடமைகளும் தப்பியது’ அவள் அவனுடன் பலகாலம் பழகிய மாதிரிப் புத்தி சொன்னாள்.
‘நேற்ற நடந்தது இவளுக்கு என்னவென்ற தெரியும்?’ அவன் தனக்குள் யோசித்தான்.அவனது ஆச்சரியம் அவளுக்குப் புரிந்தது.
‘நான் வரும்போது அவர்கள் உங்களை வழிப்பறிசெய்வதைக் கண்டு அந்த டெலிபோன் பூத்திலிருந்து போலிசுக்குப் போன் பண்ணினேன்’ என்றாள்.
அவன் அவளை நன்றியுடன் பார்த்தான்.அழகிய தேவதை தனக்குத் தரிசனம் தருவதுபோலிருந்தது.
‘ இந்த இடம் சோஹொ என்ற மிகவும் பிரசித்தமான இடம். டுரிஸ்டுகளும், நாடகக்கொட்டகைகளும், சினிமாத் தியேட்டர்களும், விபச்சார விடுதிகளும் நிறைந்த இடம். பிக் பாக்கட்டுகளும் வழிப்பறிக் கொள்ளையர்களையும் பிடிக்க இந்தப் பக்கப் போலிசார் மிகவும் திறமையான போலிஸ் படை வைத்திருக்கிறார்கள்’ அவள் சொல்லிக் கொண்டே போனாள்.
அப்படியான இடத்தில் இரவு பத்து மணிவரைக்கும் இவள் என்ன செய்கிறாள்?
‘என்ன செய்வது பரவாயில்லாத சம்பளத்தில் வேலை கிடைத்தபடியால் இந்த ஏரியாவில் செய்கிறேன்’ அவன் கேட்காமலே அவள் பெருமூச்சுடன் சொன்னாள்.
அதன்பின் அவர்கள் சந்திக்கும்போது ‘ஹலோ’வுக்கு அப்பால் பேசத் தொடங்கிக் கிட்டத்தட்ட தங்கள் வாழ்க்கை சுய சரிதத்தையே ஒருத்தருக்கு ஒருத்தர் சொல்லிக் கொண்டார்கள்.
அவள்.அந்த இடத்துக்கு அண்மையிலிருக்கும் ஒரு கலைக் கல்லூரி மாணவி என்றும் ஒரு சோஹோ நைட்கிளப்பில் றிசப்ஸனிஸ்டாக மாலை ஏழமணியிலிருந்து பத்து மணிவரைக்கும் பார்ட் ரைம் வேலை செய்வதாகவும், தான் இருக்கும் இடத்திறகு அருகில் இதைவிட நல்லவேலை கிடைத்தால தான் இந்த வேலையை விடுவதாகவும் சொன்னாள்.
அவன் தானொரு பல்கலைக்கழக மாணவனாக இருந்து அரசியற் பிரச்சினைகளால் படிப்பை நடுவில் முறித்துக்கொண்டு, லண்டனுக்கு வந்து வாழ்க்கைப் பிரச்சினையால்; ஒரு கடையில் ஒரு நாளைக்குப் பன்னிரண்டு மணித்திலயாங்கள் வேலை செய்வதாகத் தன் துயர் சொல்லி ஒப்பாரி வைத்துக்கொண்டான்..
மனோகரனிடம் மனம்விட்டுச் சொல்ல முடியாத துக்கத்தை அவளிடம் சொல்லவேண்டும்போல் வந்த உணர்வை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.
சிவசங்கரனை வழிப்பறி செய்ய வந்தவர்களையும் அவர்களிடமிருந்து காப்பாற்ற சிந்தியா செய்த உதவியையம் மனோகரனுக்குச் சொன்னபோது மனோகரன் சிவசங்கரை ஏற இறங்கப் பார்த்தான். ‘ சோஹோ என்ற இடத்தில அவள் நடுச்சாமத்தில் ஏன் வந்தாள்?’என்ற ஒருவிதமாகப் பார்த்துக்கொண்டு கேட்டான்.
சுpவசங்கர், சிந்தியா ஒரு நைட்கிளப்பில் றிசப்ஸனிஸ்டாக இருப்பதையும் அப்பாவித்தனமாகச் சொல்லிவிட்டான்.
சோஹோ தெருக்களில் ஒருபவுணுக்கு யார் பின்னாலும் போகத் தயாராகவிருக்கம் பெண்களைப் பற்றி ஒரு பெரிய பிரசங்கம் செய்தான் மனோகரன்.
விழியால் மருட்டி, முலையால் மயக்கும் பெண்களைப் பற்றி மனோகரன் செய்த வியாக்கியானத்தில்; சிந்தியா செய்த உதவியையும் ஒருகணம் மறந்தான் சிவசங்கர்.
அவள் அன்று உதவி செய்திருக்காவிட்டால் சிவசங்கருக்க என்ன நடந்திருக்கும் என்ற அவனாற் கற்பனையும் செய்யமுடியவில்லை.
அத்துடன் அவள் ஒருமாணவி, லண்டனில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் மாதிரி அவளும் பார்ட் ரைம் வேலை செய்து உழைக்கிறாள். அவள் நைட் கிளப்பில் வேலை செய்தால் என்ன ஒரு நாடகத் தியேட்டரில் வேலை செய்தால் என்ன?.உழைத்தப் பணம் சேர்த்துத் தன் படிப்பைத் தொடரும் ஒரு மாணவியை இப்படித் தரக்குறைவாக எடைபோடவேண்டுமா?
மனோகரன், தனது நண்பன் வழிதவறிப் போகாமலிருக்கத் தன்னால் முடியுமட்டும் உதவி செய்யப் போவதாகச் சபதம் செய்து கொண்டான்.
அதன்பின் மனோகரனிடம் சிந்தியாவைப் பற்றிச் சொல்வதைப் பெரும்பாலும் தவிர்த்துக்கொண்டான்.
‘வெளிநாட்டார் பேயர்கள் மடையன்கள் என்று பெரும்பாலான ஆங்கிலேயர்கள் நினைக்கிறார்கள். இவளும் உன்னுடன் விளையாடிவிட்டுப் பேய்க்காட்டி விட்டுப் போவாள் கவனமாக இரு’மனோகரன் மிகவும் அக்கறையாகத் தனது நண்பனுக்குப் புத்தி சொன்னான்.
அவன் ஏன் அப்படியெல்லாம் கற்பனை செய்கிறான் என்று சிவசங்கருக்குப் புரியவில்லை;.
அவளோ அல்லது அவனோ ‘ஏதோ’விளையாட்டகளில் ஈடுபடவில்லை. அப்படியான உறவு வளர்வதாகச் சிவசங்கருக்குப் புரியவுமில்லை.
சிவசங்கரும் சிந்தியாவம், சந்தித்துக் கொள்ளும்போது பெரும்பாலும் தங்கள் வேலை விடயங்களைப் பற்றிப் பேசி தாங்கள் கஷ்டப்பட்டுவேலை செய்யும் துயரத்தைப் பகிர்ந்து கொள்வார்கள்.
ஆனால் அவளைக்காணாமல் ஒருநாளும் இருக்கமுடியவில்லை என்ற உள்ளுணர்iவுயோ அல்லது அவளை அடிக்கடி நினைத்துக்கொள்ளும் தனது மனவோட்டத்தையோ அவன் மனோகரனுக்குச் சொல்லவில்லை.
தனது வாட்டசாட்டமான தோற்றத்தைக் கண்ணாடியில் பார்க்கும்போது சிந்தியா அவனைப் பார்த்த விதம் அவனுக்குப் புரியாமலில்லை.
‘அண்ணா நீங்கள் அழகான ஆண்பிள்ளை’ என்ற அவனின் சின்னத் தங்கை பெருமைப்பட்டதை அவன் மறக்கவில்லை.
சுpந்தியா இளமை பொங்கும் கவர்ச்சியான கலைக் கல்லூரி மாணவி. நண்பனின் போக்கில் கண்ட மாறுதல்களை அவதானித்த மனோகரன்,’நைட் கிளப்பில் றிசப்ஸனிஸிட்டாக வேலை செய்பவள் எப்படிக் கற்புடையவளாக இருப்பாள்?’ என்ற ஒரு பெரிய கேள்வியைக் கேட்டான்.
சிவசங்கருக்குக் கோபம் வந்தது. ‘நான் சீக்கிய கடையில் விஸ்கி போத்தல்களுடன் வேலை செய்கிறேன் நான் குடிகாரனில்லை’ என்ற பொருமினான். மனோகரன் சிந்தியாவைப் பற்றி அருவருப்பாகப் பேசியது அவனுக்கு மிகவும் கோபத்தைத் தந்தது.
‘ ஏனடா மச்சான் எகிறிக் குதிக்கிறாய் அவளுக்கு உன்னோட இன்பம் அனுபவிக்க விருப்பமென்பதை அவள்; சாடையாகச் சொன்னால் நீயேன் தயங்க வேணும். அனுபவித்து விட்டு மறந்து விடு’. மனோகரன் மிகச் சாதாரணமாக இருமனித உறவை இப்படி அசிங்கப் படுத்திப் பேசியது சிவசங்கருக்கு ஆத்திரத்தை மட்டுமல்ல அதிர்ச்சியையும் உண்டாக்கியது.
மனோகரன் அடிக்கடி இப்படிப் பேசியதால் சிவசங்கர் மிகவும் குழம்பி விட்டான்.
அடிக்க அடிக்க அம்மியும் நகரும்தானே?
‘மச்சான் அவள் சோசியலாகப் பழக விரும்பினால் அத்தோட சரி;, அளவுக்கு மீறிப்போய் ஆபத்தில் அகப்படாதே’ மனோகரன் முன்னுக்குப் பின் முரணாக ஏதோவெல்லாம் சொல்லிக் குழப்பிக் கொண்டிருந்தான். தான் தனது நண்பனைச் சரியான வழியில் கொண்டு நடத்தவதாக அவன் நினைப்பது சிவசங்கருக்குத் தெரியும்.
மனோகரன் கற்பனை செய்வதுபோல் சிவசங்கரனும் சிந்தியாவும் இதுவரையும் எந்த ‘அந்தரங்க’ உறவும் வைத்துக்கொள்ளவில்லை. அந்த அளவுக்கு அவர்களின் உறவும் வளரவில்லை.
அவள் ஒரு ஆங்கிலேயப் பெண். மிகவும் சுதந்திர உணர்வு கொண்டவள் ஆண்களின் தேவைகளுக்குப் பெண்கள் ஆடவேண்டும் என்ற தத்துவத்திற்கு எதிரானவள்.
இரவு பத்து மணிககு வேலை முடிய தனியாக வீட்டுக்குப்போகும் தைரியமுள்ளவள். தனது அழகை, தான் வேலை செய்யம் நைட் கிளப்புககு வருபவர்கள் வாயுறப் பார்ப்பதைத் தெரிந்தும் தெரியாதமாதிரி எடுத்தெறிந்து விட்டுத் தன் வேலையைச் செய்து விட்டுத் தன் வேலையிற் கவனமாக இருப்பவள்.
இங்கிலாந்தில் தனிமனித சுதந்திரத்துள்ள சட்டபாதுகாப்பகளைச் சரியாக உணர்ந்து கொண்டவள். அளவுக்கு மீறிப்போனால் அடுத்த கணம் சட்டத்தைத் துணையாக அழைக்கத் தயங்காதவள். அதைத்தான் சிவசங்கரரின் பாதுகாப்பக்கும் செய்தாள் அவனை வழிபறிக் கொள்ளைக்காரக் கும்பல் வதைத்தபோது வழிப் போக்கர்கள்போல் ஏனோதானோ என்ற தன்பாட்டுக்குப் போகாமல்,போலிசுக்குப் போன்பண்ணி அவனைபப் பாதுகாத்தவள்.
அதையொட்டி நடக்கவிருக்கும் வழக்கில் சாட்சியாக வந்து சிவசங்கருக்கு உதவப்போகிறவள்.
மனோகரன், கற்பனைசெய்யும் ‘இனிய அனுபங்களை;மிகச் சுலபமாக அவளுடன் நடைமுறைப் படுத்தலாம் என்பது முடியாத காரியம்.
சிவசங்கரன், ஒரு பழமையான தமிழப்பண்பாடுகளை இறுக்கிப் பிடிக்கும் கவுரமான ஆசிரியரின் மகன். பெண்களை மதிக்கவேண்டும்,பாதுகாக்க வேண்டும் என்று அவன் தாய் தகப்பனிடமிருந்து படித்துக்கொண்டவன்.
சந்தர்ப்ப சூழ்நிலையால்,’செக்ஸ்’ வியாபாரத்தின் முன்னிடமான ‘சோஹோ’ என்ற தர்மசங்கடமான இடத்தில் பெட்டிகள் தூக்கியடுக்கும் வேலைசெய்யும் பழைய பல்கலைக்கழக் மாணவன். ஆவனுக்குச் சிந்தியாவைப் பிடிக்கும் என்பது ஏனோதானோ என்ற வித்தில் சொல்வது அவன் மனதில் அவள் எடுத்தக்கொண்ட இடத்தை அவமானம் செய்வதாக அவன் நினைக்கிறான்.
மனோகரன் நினைப்பதுபோல் அவர்களின் உறவு இதுவரை எந்தப் பரிமாண வளர்ச்சியும் அடையவில்லை.
இருவருக்கும் விடுமுறையான ஞாயிற்றக் கிழமைகளில், பக்கத்திலுள்ள றீஜன்ட் பார்க்கில் ஒன்றாகப் போய் மார்கழிமாதக்குளிரில்,நீண்ட நேரம் நடந்து திரிந்து தங்கள் வாழ்க்கையில் நடந்த சில விடயங்களை, ஆரம்ப உறவு நிலையிலுள்ள பெரும்பாலான சோடிகள்போல் பகிர்ந்திருக்கிறார்கள்.
அவளை லண்டனின் மத்தியில் மிகப் பிரபலமான,’ ரவி சங்கர்’ உணவகத்தற்குக் கூட்டிக்கொண்டுபோனான். சாப்பாடு முடிய அவள் தான் சாப்பிட்ட உணவுக்;குரிய பங்கைக் கொடுத்தபோது அவன் திடுக்கிட்டான்.
; நான்தானே உன்னைச் சாப்பிடக் கூப்பிட்டேன். பில் கொடுப்பது என் பொறுப்பு ‘அவன் தர்மசங்கடத்துடன் முணுமுணுத்தான்’
.
‘ நான் உழைக்கும்பெண். நான் சாப்பிட்டதற்குப் பணம் கொடுக்க வசதியுண்டு’ தனது அழகிய விழிகளையுயர்த்தி அவனுக்குச் சிரித்தபடி பதில் சொன்னாள்.
உன்னுடன் இணைந்துகொள்ளவோ அல்லது நீ என் சுதந்திரத்தைத் தவறுதலாக எடுத்துக் கொள்வதை நான் விரும்பவில்லை’ என்று மறைமுகமாகச் சொல்கிறாளா?
அவனுக்குப் புரியவில்லை.
இன்று மனோகரன் மான்செஸ்டரிலிருக்கும் தனது உறவினர்களின் வீட்டுக்குப் போய்விட்டான்.
(தொடரும்)

No comments:

Post a Comment