Saturday, 29 April 2017

கதை கேளு... கதை கேளு கழகத்தின் கதை கேளு! ஊழலை ஒழிக்க வாருங்கள்! -மருத்துவர். இராமதாஸ

கதை கேளு... கதை கேளு கழகத்தின் கதை கேளு!

        ஊழலை ஒழிக்க வாருங்கள்!
         -மருத்துவர். இராமதாஸ்

தமிழ்நாட்டில் அதிமுக என்ற ஒரு கட்சி தோன்றுவதற்கு ஆயிரம் காரணங்கள் கூறப்பட்டாலும், அதன் நிறுவனரால் முன்வைக்கப்பட்ட ஒற்றைக் காரணம் தமிழ்நாட்டில் ஊழலை ஒழிக்கவேண்டும் என்பதுதான். காங்கிரஸ் கட்சிக்காரராக வாழ்க்கையைத் தொடங்கிய எம்.ஜி.ஆர்., திரையுலகில் கலைஞருடன் ஏற்பட்ட நட்பு காரணமாக அண்ணாவின் தலைமையை ஏற்று தி.மு.க.வில் தம்மை இணைத்துக்கொண்டார்.

அண்ணாவால் இதயக்கனி என்று போற்றப்படும் அளவுக்கு அவரது நம்பிக்கையை எம்ஜிஆர் பெற்றார். அண்ணாவின் மறைவுக்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பை யார் ஏற்பது? என்பதில் தி.மு.க.வின் இரண்டாம்நிலைத் தலைவராக இருந்த நாவலர் நெடுஞ்செழியனுக்கும், கலைஞருக்கும் கடும் போட்டி ஏற்பட்டது. அந்த நேரத்தில் கிங் மேக்கராக இருந்து கலைஞரை முதலமைச்சராகவும், தி.மு.க.வின் முதல் தலைவராகவும் உருவாக்கியவர் எம்.ஜி.ஆர். ஆவார். அதன்பின்னர்,  தி.மு.க.வில் கணக்குக் கேட்டதைத் தொடர்ந்து அக்கட்சியிலிருந்து தூக்கியெறியப்பட்டார்.

அ.தி.மு.க. தொடக்கம் - முதல் வெற்றி

தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட 3 நாட்களில் அ.தி.மு.க. என்ற புதிய கட்சியைத் தொடங்கிய அவர், அடுத்த 6 மாதங்களில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் அதிமுகவை வெற்றிபெறச் செய்து அதன் வலிமையை உலகறியச் செய்தார்.

அதிமுகவை எதற்காக உருவாக்கினீர்கள் என்று கேட்டபோது, அதற்கு எம்ஜிஆர் அளித்த பதில், “அண்ணாவுக்குப் பின் கலைஞர் ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளில் ஊழல் பெருக்கெடுத்துவிட்டது. அந்த ஊழலை ஒழிக்கவேண்டும் என்பதற்காகத்தான் அண்ணாவின் பெயரால் புதிய இயக்கத்தைத் தொடங்கியுள்ளேன்” என்பதுதான். அதைப்போலவே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவரான கல்யாண சுந்தரத்துடன் இணைந்து, தி.மு.க. ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த ஆணையிட வேண்டும் என்று மனு அளித்தார்.

சர்க்காரியா ஆணையம் விசாரணை

எம்ஜிஆர் அளித்த மனுவின் அடிப்படையில்தான் தி.மு.க.வின் ஊழல்கள் குறித்து உச்சநீதிமன்ற  நீதிபதி சர்க்காரியா தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து விசாரிக்கப்பட்டது. அதன்படி, தி.மு.க. மீதான 28 ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து சர்க்காரியா ஆணையம் விசாரணை நடத்தியது. அந்தக் குற்றச்சாட்டுகளின் விவரம் வருமாறு:
1.  மேகலா பிக்சர்ஸ் ஊழல்.
2.  அஞ்சுகம் பிக்சர்ஸ் ஊழல்.
3.  டிராக்டர் ஊழல்.
4. கருப்பு பணத்தில் கோபாலபுரம் இல்லம் விரிவாக்கம்.
5. முரசொலி ஊழல்.
6. திருவாரூர் வீட்டு ஊழல்.
7. ராஜா அண்ணாமலைபுரம் வீடு ஊழல்.
8. கோபாலபுரம் வீட்டு மதிப்பு ஊழல்.
9. ஊழல் அதிகாரியை காப்பாற்றி முறைகேடு செய்தது.
10. வீராணம் ஊழல்.
11. (அ).நாதன் பப்ளிகேசன்ஸ் ஊழல்.
(ஆ) பூச்சி மருந்து தெளிப்பு ஊழல்.
12.  மணி அரிசி ஆலை கடன் ஊழல்.
13.  ஜெ.கே.கே. குழுமத்தின் விற்பனை வரி ஏய்ப்பு ஊழல்.
14. சமயநல்லூர் மின்திட்ட ஊழல்.
15. குளோப் தியேட்டர் வாடகை சட்டத் திருத்த ஊழல்.
16.  பிராட்வே டைம்ஸ் ஊழல்.
17.  சர்க்கரை ஆலை ஊழல்.
18.  கூட்டுறவு சங்க ஊழல்.
19.  மது ஆலை ஊழல்.
20.  கொடைக்கானல் & பழனி சாலை ஊழல்.
21.  தி.மு.க. அறக்கட்டளைகள் ஊழல்.
22.  நில ஆக்கிரமிப்பு & கொலை குற்றச்சாட்டு.
23.  ஊழல், கிரிமினல் குற்றவாளிகளுக்கு ஆதரவு.
24.  தொழிற்சங்க ஊழல்.
25.  ஊடகங்களுக்கு மிரட்டல்.
26.  மின் திருட்டு.
27.  எதிர்க்கட்சிகள் மீது தாக்குதல்.
28.  இழப்பீட்டு தொகை ஊழல்.

தி.மு.க. அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்திய நீதிபதி சர்க்காரியா, தி.மு.க. ஆட்சியில் ஊழல்கள் நடந்தது உண்மைதான் என்றும், அவற்றை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு விஞ்ஞான முறையில் ஊழல்கள் நடைபெற்றிருக்கின்றன என்றும் அவரது அறிக்கையில் குறிப்பிட்டது தமிழகம் மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்தியாவும் அறிந்த உண்மையாகும். கலைஞருக்குப்பின் அமைந்த எம்ஜிஆர் தலைமையிலான அரசில் பெரிய அளவில் இல்லாவிட்டாலும் சொல்லிக்கொள்ளும்படியாக பல ஊழல்கள் நடைபெற்றன.

ஜெயலலிதா ஊழல்

எம்ஜிஆருக்குப் பின் வந்த ஜெயலலிதா ஆட்சியில்தான் ஊழல்கள் சுனாமியாக பெருக்கெடுத்தன.  1991-96 ஆட்சிக்காலத்தில் மட்டும் ஜெயலலிதா மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் மீது 33 ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஜெயலலிதா மீது மட்டும் 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவற்றின் விவரம் வருமாறு:
1. வண்ணத் தொலைக்காட்சி பெட்டி ஊழல் வழக்கு.
2. டான்சி ஊழல் வழக்கு.
3. வெளிநாட்டு பரிசு ஊழல் வழக்கு.
4. பிறந்த நாள் பரிசு வழக்கு.
5. வருமான வரி வழக்கு.
6. கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே வழக்கு.
7. நிலக்கரி இறக்குமதி ஊழல் வழக்கு.
8. கிரானைட் குவாரி ஊழல் வழக்கு.
9. ஸ்பிக் பங்கு விற்பனை ஊழல்.
10. ரூ.66.65 கோடி சொத்துக்குவிப்பு வழக்கு.
11. தெற்காசிய விளையாட்டுப் போட்டி விளம்பர ஊழல் வழக்கு.
12. ஹைதராபாத் திராட்சைத் தோட்ட வழக்கு.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை

இவற்றில் பல வழக்குகளில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டாலும், உயர்நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீடுகளில் தப்பினார். வருவாய்க்கு மீறி சொத்து குவித்த வழக்கில் விசாரணை நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதா, கர்நாடக உயர்நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். எனினும் உச்சநீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டில் சொத்துகுவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவருக்கும் விதிக்கப்பட்ட தலா 4 ஆண்டு சிறைத் தண்டனை, ரூ.10 கோடி அபராதம் ஆகியவை உறுதி செய்யப்பட்டன. ஜெயலலிதா மறைந்ததால் அவருக்கு மட்டும் தண்டனை வழங்கவில்லை.

பா.ம.க. அளித்த ஊழல் பட்டியல்

ஜெயலலிதாவின் முதல் ஐந்தாண்டு ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற ஊழல்கள் தொடர்பான வழக்குகள் மட்டும்தான் இவையாகும். அதன்பின், 2001-2006, 2011-2016 ஆட்சிக்காலத்தில் அதைவிட பலமடங்கு அதிக ஊழல்கள் நடைபெற்றன. 17.02.2015 அன்று தமிழக ஆளுநர் ரோசய்யாவிடம் பாட்டாளி மக்கள் கட்சி அளித்த 209 பக்கங்கள் கொண்ட ஊழல் குற்றச்சாட்டு பட்டியல் மற்றும் அத்துடன் இணைக்கப்பட்டிருந்த ஆவணங்களை பார்த்தாலே அதிமுக ஆட்சியில் எந்த அளவுக்கு ஊழல்கள் நடைபெற்றிருக்கின்றன என்பதை அறியலாம்.

ஆற்றுமணல் ஊழல், தாது மணல் ஊழல், கிரானைட் ஊழல், கட்டுமானப் பணிகள் ஒப்பந்த ஊழல், பணி நியமன ஊழல், நெடுஞ்சாலை ஊழல், பருப்பு மற்றும் முட்டை கொள்முதல் ஊழல் ஆகியவற்றில் மட்டும் கடந்த 10 ஆண்டுகளில் ரூ.70 லட்சம் கோடி அளவுக்கு ஊழல்கள் நடைபெற்றிருக்கின்றன. குறிப்பாக தாது மணல் ஊழலின் மதிப்பு மட்டும் கிட்டத்தட்ட ரூ.50 லட்சம் கோடி ஆகும். ஜெயலலிதா ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விசுவநாதன்,  வைத்திலிங்கம், எடப்பாடி பழனிசாமி, பாப்பிரெட்டிப்பட்டி பழனியப்பன் ஆகியோர் ஊழல் மூலம் சம்பாதித்த பணத்திற்கு சரியாக கணக்கு காட்டவில்லை என்பதற்காக, அவர்களது வீடுகளில் ஜெயலலிதா அனுப்பிய தனிப்படை அதிரடி ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் சுமார் 30,000 கோடி ரூபாய் அளவுக்கு ஆட்சி மேலிடத்திற்கு கணக்கில் காட்டப்படாமல் சொத்துக்கள் குவிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவை அனைத்தும் ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர்களின் பெயருக்கு மாற்றப்பட்டன.

ஊழல் சுனாமி அதிமுக

இவ்வளவுக்குப் பிறகும் மேற்கண்ட அமைச்சர்களிடம் 30,000 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதிலிருந்தே அதிமுக அமைச்சர்கள் எந்த அளவுக்கு ஊழல் செய்து சொத்துக்களை குவித்திருப்பார்கள் என்பதை உணர்ந்துகொள்ள முடியும்.

ஊழலை ஒழிக்கவேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் தொடங்கப்பட்ட ஒரு கட்சி இன்று ஊழல் சுனாமியாக மாறியிருக்கிறது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாக உடைந்திருக்கிறது. இதற்குக் காரணம் கொள்கை மாறுபாடுகள் அல்ல. மாறாக, பதவிகளைப் பயன்படுத்தி கொள்ளையடிப்பதில் ஏற்பட்ட போட்டிதான் அதிமுக உடைந்ததற்குக் காரணமாகும்.

முதலமைச்சர் பதவியிலிருக்கும் வரை சசிகலாவின் காலில் விழுந்து சின்னம்மா என்று பவ்யம் காட்டிய பன்னீர்செல்வம், இப்போது சசிகலாவும், அவரது குடும்பத்தினரும் மிகப்பெரிய ஊழல்வாதிகள் என்றும், அவர்கள்தான் தமிழகத்தை சுரண்டி கொழுத்தவர்கள் என்றும் புனிதராக மாறி குற்றம்சாட்டுகிறார்-. மற்றொருபுறம், பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் அமைச்சர்களாக இருந்தபோது எப்படியெல்லாம் கொள்ளையடித்தார்கள் என்பது குறித்து சசிகலா தரப்பு புகார்களை அடுக்கி வருகிறது.

சிறையில் சசிகலா

இவற்றையெல்லாம் தாண்டிப்பார்த்தால், ஊழல் செய்ததற்காக சசிகலா, அவரது அண்ணி இளவரசி, அக்காள் மகன் சுதாகரன் ஆகியோர் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதிமுகவின் திடீர் துணைப்பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட தினகரன், ஃபெரா வழக்கில் தினந்தோறும் நீதிமன்றத்தின் படிக்கட்டுகளில் ஏறி வருகிறார். இதுபோதாது என இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக தேர்தல் ஆணையத்திற்கு கையூட்டு கொடுத்த வழக்கில் தினகரன் கைது செய்யப்பட்டு  காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்.

மன்னார்குடி ஆதிக்கம்

சசிகலாவும், தினகரனும் கைது செய்யப்பட்டதால் அதிமுக புனிதமாகிவிடும்  என்று அர்த்தமல்ல. வெட்ட வெட்ட துளிர்ப்பார்கள் என்பதைப் போல சசிகலா தலைமையிலான மன்னார்குடி குழுவில்  திவாகரன், அவரது மகன் ஜெய் ஆனந்த், சசிகலா கணவர் நடராஜன், ராமச்சந்திரன் , பழனிவேலு  உள்ளிட்ட அவரது சகோதரர்கள், தினகரனின் மைத்துனர் வெங்கடேஷ், சகோதரர் பாஸ்கரன், சிறையில் அடைக்கப்பட்டுள்ள இளவரசியின் மகன் விவேக் உட்பட ஏராளமானோருக்கு சசிகலாவின் ஊழலில் பங்கு உள்ளது. ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலா இப்போது சிறைக்கு சென்று விட்டாலும் அவரது ஊழலை இவர்கள்  தொடருவர்கள். அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் திரைமறைவில் நடைபெற்று வருகின்றன.

இதைப் பயன்படுத்திக்கொண்டு எடப்பாடி தலைமையிலான அணியும், பன்னீர்செல்வம் தலைமையிலான அணியும் ஒன்றாக இணைந்து ஊழலைத் தொடர திட்டமிட்டு வருகின்றனர். எந்தெந்தப் பதவிகளை யார் அனுபவிப்பது என்பது குறித்த குழப்பங்கள் காரணமாகவே அவர்களுக்கு இடையிலான இணைப்புப் பேச்சுகள் இன்னும் தொடங்காமல் உள்ளன. இவர்கள் இரு அணிகளும் இணைந்தோ, இணையாமலோ எப்படி ஆட்சி நடத்தினாலும் அதில் ஊழல்கள் கடந்த காலத்தில் இருந்ததைவிட பல மடங்கு அதிகமாக தலைவிரித்தாடும். இவர்களுக்கு மாற்றாக தி.மு.க.வை ஆட்சியில் அமர்த்தினால், ஏற்கெனவே விலைக்கு வாங்கப்பட்ட பாதி தமிழகம் தவிர மீதி தமிழகத்தையும் அக்கட்சியின் முதல் குடும்பம் விலைக்கு வாங்கிவிடும் என்பது மறுக்க முடியாத யதார்த்தம்.

ஊழலை ஒழிக்க பா.ம.க.

அதிமுகவைத் தொடங்கிய காலத்தில் எம்ஜிஆர் அறிவித்தவாறு தமிழகத்தில் ஊழலை ஒழிக்கவேண்டுமானால், அது அக்கட்சியின் தொண்டர்கள் எடுக்கும் முடிவில்தான் உள்ளது. கடந்த காலங்களில் பலமுறை நான்கூறிய உண்மை என்னவென்றால், “அதிமுகவைப் பொறுத்தவரை ஜெயலலிதாவும் சசிகலாவும் மட்டுமே கெட்டவர்கள். அக்கட்சியின் தொண்டர்கள் அனைவரும் நல்லவர்கள்” என்பதுதான்.

தமிழகத்தில் ஊழல் அல்லாத முன்னேற்றத்தை நோக்கிய ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. 2016 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கை, ஒவ்வொரு ஆண்டும் பா.ம.க. சார்பில் வெளியிடப்பட்டு வரும் நிழல் நிதிநிலை அறிக்கை, நிழல் வேளாண் நிதிநிலை அறிக்கை உட்பட பா.ம.க. சார்பில் இதுவரை வெளியிடப்பட்டுள்ள 35 ஆவணங்களை படித்துப் பார்த்தாலே பாட்டாளி மக்கள் கட்சியின் தொலைநோக்குப் பார்வையை புரிந்துகொள்ள முடியும்.

பா.ம.க.வின் இணைய வாருங்கள்!

எனவே, தமிழ்நாட்டில் ஊழல் அல்லாத, வளர்ச்சியை நோக்கிய, கல்வி, மருத்துவம், சுகாதாரம் ஆகியவற்றை இலவசமாக வழங்கக்கூடிய ஆட்சி அமையவேண்டும் என்று விரும்பும் அதிமுக தொண்டர்கள் அனைவரும் பாட்டாளி மக்கள் கட்சியில் இணையவேண்டும். இந்த அழைப்பு அதிமுக சகோதரர்களுக்கு மட்டும்தான் என்று எவரும் கருதத் தேவையில்லை. ஊழல் ஒழிப்பு, தமிழகத்தின் வளர்ச்சி ஆகியவற்றில் அக்கறை கொண்ட அனைவரையும் பா.ம.க.வில் இணைய வரும்படி அழைக்கிறேன்.

‘‘கதை கேளு... கதை கேளு...  கழகத்தின் கதை கேளு!’’ என்ற தலைப்பில் நான் எழுதி வந்த தொடர் தான் நிறைவடைந்திருக்கிறது. ஆனாலும் அதிமுகவின் பயணம் இன்னும் முடியவில்லை. அதிமுகவின் ஊழல்கள் குறித்து முந்தைய அத்தியாயங்களில் விரிவாக விளக்கியிருக்கிறேன். எந்தக் கொள்கையும் இல்லாமல் எம்.ஜி.ஆர் என்ற திரைப்பட நடிகரின் சினிமாக் கவர்ச்சியை முதலீடாக வைத்துத் தொடங்கப்பட்ட அதிமுக, அவரது மறைவுக்குப்  பின்னர் ஜெயலலிதா என்ற நடிகையின்  சினிமாக் கவர்ச்சியால் புத்துயிரூட்டிக் கொண்டது. ஊழலை ஒழிப்பதற்காக தொடங்கப்பட்டதாக கூறப்படும் அதிமுக ஒரு கட்டத்தில் ஊழல் சுனாமியாக உருவெடுத்தது. ஊழல் என்றால் அதிமுக, அதிமுக என்றால் ஊழல் என்ற அளவுக்கு அதிமுகவின் ஊழல்கள் இந்தியாவில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் பிரபலமடைந்தது. பிலிப்பைன்ஸ் அதிபரின் மனைவி இமெல்டா மார்கோசை மிஞ்சும் அளவுக்கு ஜெயலலிதா ஊழல் செய்ததுடன், ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்தார். இந்தியா ஜனநாயக நாடாக இருந்தாலும் ஜெயலலிதா மட்டும் சர்வாதிகாரியாகவே ஆட்சி செய்தார். ஜெயலலிதாவின் ஊழலும், ஆடம்பரமும் அதிகரிக்க அதிகரிக்க அதே வேகத்தில் தமிழகத்தின் அழிவும் அதிகரித்தது.

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்து தமிழகம் நலம் பெற வேண்டும்; வளர்ச்சியடைய வேண்டுமானால் தமிழகத்தில் அதிமுக அஸ்தமனம்  அடைய வேண்டும். அது விரைவில் அதுவும் நடக்கும்.
( முற்றும்)

குறிப்பு: ‘‘கதை கேளு... கதை கேளு...  கழகத்தின் கதை கேளு!’’ என்ற தலைப்பிலான இந்த தொடர் குறித்து பல்வேறு அரசியல் மற்றும் சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என்னை நேரிலும், தொலைபேசி மூலமும் தொடர்பு கொண்டு கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். எனது முகநூல் பக்கத்தில் இத்தொடரை படித்த நண்பர்கள் தங்களில் கருத்துக்களை founderpmk@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரியிலோ, தைலாபுரம் தோட்ட இல்ல அஞ்சல் முகவரிக்கு கடிதம் மூலமாகவோ தெரிவிக்கலாம்.
                                     *******

No comments:

Post a Comment