Monday, 24 April 2017

உழவர்களைக் காக்கத் தேவை ஆக்கப்பூர்வ செயல்களே தவிர, முழு அடைப்பு அல்ல! ---அறிக்கை --- -மருத்துவர். இராமதாஸ

உழவர்களைக் காக்கத் தேவை ஆக்கப்பூர்வ
செயல்களே தவிர, முழு அடைப்பு அல்ல!
                         ---அறிக்கை ---
             -மருத்துவர். இராமதாஸ்

பொதுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட உழவர்களின் கோரிக்கைகளை   மத்திய அரசு ஏற்க மறுப்பதைக் கண்டித்து தமிழ்நாட்டில் நாளை மறுநாள் முழுஅடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இம்முடிவு நேற்று நடந்த கலந்தாய்வுக் கூட்டத்திலும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது அரசியல் அடையாளம் தேடும் நடவடிக்கையே தவிர உழவர்களை காப்பதற்கான முயற்சி அல்ல என்பதே பா.ம.க.வின் கருத்து.

பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், ஜப்தி நடவடிக்கைகளை கைவிட வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும், வறட்சியால் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கும், உயிரிழந்த உழவர்களின் குடும்பங்களுக்கும் நிவாரண நிதி வழங்க வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும்  என்பன உள்ளிட்ட உழவர்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் பாட்டாளி மக்கள் கட்சி ஆதரிக்கிறது. அதுமட்டுமின்றி உழவர்களுக்குத் தேவையான உரம், பூச்சிக்கொல்லி உள்ளிட்ட இடுபொருட்களை இலவசமாக வழங்க வேண்டும், ஓர் ஊராட்சிக்கு ஒரு டிராக்டரை உழவுப் பணிகளுக்காக இலவசமாக வழங்க வேண்டும், உழவர்களின் விளைபொருட்களுக்கு போதிய விலை வழங்க வேண்டும், உற்பத்திச் செலவுடன் 50% லாபம் சேர்த்து கொள்முதல் விலை நிர்ணயிக்க வேண்டும், உழவர்கள் ஊதியக்குழு அமைக்க வேண்டும், தமிழகத்தின் பாசனப்பரப்பை விரிவுபடுத்தும் வகையில் நீர்ப்பாசனப் பெருந்திட்டத்தை செயல்படுத்த வேண்டும், உழவர்களுக்கு மானியத்துடன் கூடிய பயிர்க்கடன் வழங்க வேண்டும் என உழவர்கள் முன்வைக்காத கோரிக்கைகளுக்காகவும் பா.ம.க. தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது.

பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் கடந்த 10 ஆண்டுகளாக வெளியிடப்பட்டு வரும் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையில் உழவர்கள் நலனுக்காக ஏராளமானத் திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தை மாற்றி மாற்றி ஆட்சி செய்து வரும் இரு திராவிடக் கட்சிகளும் இந்த யோசனைகளை செயல்படுத்தியிருந்தாலே விவசாயிகளின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட்டிருக்கும். ஆனால், உழவர்கள் நலனில் அக்கறைக் கொண்டவர்களைப் போலக் காட்டிக் கொள்ளும் திமுகவும், அதிமுகவும் உழவர்களின் நீண்டகால கோரிக்கைகளில் ஒன்றைக்கூட நிறைவேற்றியதில்லை; அதற்காக முயன்றதும் இல்லை. மாறாக உழவர்களின் கோரிக்கைக்காக பாட்டாளி மக்கள் கட்சி அனைத்துத் தளங்களிலும் போராடி வருகிறது. கடந்த மார்ச் 17-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்,‘‘ உலகுக்கு உணவு படைக்கும் உழவர்களை  எனது தாய், தந்தைக்கு அடுத்த கடவுளாக வணங்குகிறேன். அவர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப் பட வேண்டும்’’ என்று வலியுறுத்தினார். அதுமட்டுமின்றி, தில்லியில் போராடிய உழவர்களை சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் முழு ஆதரவையும் தெரிவித்திருக்கிறார்.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் 07.04.2016 அன்று தஞ்சாவூரில் உழவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் அவர்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சு நடத்திய மருத்துவர் அன்புமணி இராமதாஸ், உழவர்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தருவதாக சமூக உடன்பாட்டில் கையெழுத்திட்டதுடன், அக்கோரிக்கைகளை பா.ம.க. தேர்தல் அறிக்கையிலும் சேர்த்தார். தேர்தலுக்குப் பிறகு  உழவர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி 10.01.2017அன்று கும்பகோணத்தில் பல்லாயிரக்கணக்கான உழவர்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை எனது தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சி நடத்தியது. இவ்வாறாக உழவர்களுக்காக குரல் கொடுப்பதில் பாட்டாளி மக்கள் கட்சி யாருக்கும் சளைத்ததில்லை.

ஆனால், எந்த அடிப்படையில் உழவர்களுக்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும், முழு அடைப்புப் போராட்டத்தையும் திமுக நடத்துகிறது என்பது தான் புரியவில்லை. காவிரிப் பிரச்சினைக்கு காரணமே  திமுக தான். 1924-ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட காவிரி நீர்ப்பகிர்வு ஒப்பந்தத்தை 1974-ஆம் ஆண்டு புதுப்பிக்கத் தவறியதும், 1970-ம் ஆண்டுகளில் காவிரி  துணை நதிகளின் குறுக்கே கபினி, ஹாரங்கி, ஹேமாவதி உள்ளிட்ட 4 அணைகளை கர்நாடக அரசு கட்டியதை தடுக்கத் தவறியதும் திமுக அரசு தமிழக விவசாயிகளுக்கு செய்த துரோகங்களுக்கு உதாரணமாகும். ஹாரங்கி அணை கட்டுவது குறித்த பிரச்சினை ஏற்பட்ட போது காவிரிச் சிக்கலுக்குத் தீர்வு காணும் நோக்குடன் நடுவர் மன்றம் அமைக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை வாபஸ் பெற்று துரோகம் செய்ததும் கலைஞர் தான். காவிரி நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பு 05.02.2007 அன்று வெளியான நிலையில், அதன்பின் 2013-ஆம் ஆண்டு இறுதிவரை 6 ஆண்டுகளுக்கு மேலாக மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக,  நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை செயல்படுத்துவதற்காக சிறு துரும்பையாவது கிள்ளிப்போட்டிருக்குமா?  என்பதை மக்களின் முடிவுக்கே விட்டு விடுகிறேன். காவிரி பாசன மாவட்டங்களை பாலைவனமாக்கும் மீத்தேன் திட்டத்திற்கு அனுமதி அளித்து விட்டு, அது பெரிய சர்ச்சையானவுடன் தெரியாமல் செய்து விட்டதாகக் கூறி வருத்தம் தெரிவித்த உழவர்களின் தோழன் யார்? என்பதை இந்த உலகமே அறியும்.

இத்தகைய கடந்த காலத்தைக் கொண்ட திமுகவுக்கு உழவர்களின் நலனுக்காக போராடுவதற்கு என்ன தகுதி இருக்கிறது? ஒருவேளை கடந்த காலங்களில் உழவர்களுக்கு இழைத்த துரோகங்களுக்கு பரிகாரம் தேடுவதற்காகத் தான் அவர்களுக்கு ஆதரவாக போராட திமுக முன்வந்திருக்கிறது என்று வைத்துக் கொண்டாலும், அதற்காக திமுக தேர்ந்தெடுத்துள்ள போராட்ட வடிவம் பயனளிப்பதை விட பாதிப்பையே ஏற்படுத்தும். ஒரு நாள் முழுவதும் கடைகளை அடைத்தும், போக்குவரத்தை தடை செய்தும் போராட்டம் நடத்தும் போது அதனால் பல்லாயிரம் கோடி இழப்பு ஏற்படும் என்பது ஒருபுறமிருக்க, அனைத்துத் தரப்பு மக்களும் மிகக்கடுமையாக பாதிக்கப்படுவார்கள். அதுமட்டுமின்றி, முழு அடைப்புப் போராட்டங்களை உச்சநீதிமன்றம் தடை செய்துள்ள நிலையில், அதை மீறி போராட்டம் நடத்தினால், அதன்பிறகு எந்த முகத்தை வைத்துக் கொண்டு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும்படி உச்சநீதிமன்றத்திடம் கோர முடியும். உழவர்களின் பெயரால் நடத்தப்படும் முழு அடைப்புப் போராட்டத்தால்  பாதிக்கப்படும் மக்கள் உழவர்களைத் தான் தூற்றுவர் என்பதால் அவர்கள் தரப்பு நியாயம் அடிபட்டுவிடும்.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட இருப்பதை தடுத்து நிறுத்தக் கோரி, பாட்டாளி மக்கள் கட்சி அங்கம் வகித்த  இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் 04.02.2009 அன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்த போது, உச்சநீதிமன்றத் தீர்ப்பை காரணம் காட்டி அதற்கு அனுமதி அளிக்க அப்போதைய முதல்வர் கலைஞர்  மறுத்து விட்டார். அதுமட்டுமின்றி அப்போதைய தலைமைச்செயலர் ஸ்ரீபதி சார்பில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் மிரட்டும் தொனியில் கடிதம் அனுப்பப்பட்டது. தொப்புள்கொடி உறவுகளாக ஈழத்தமிழரை காப்பாற்றுவதற்கு முழு அடைப்பு நடத்த அனுமதி மறுத்த ஒரு கட்சி, இப்போது உழவர்கள் நலனுக்காக உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி போராட்டம் நடத்தப்போவதாகக் கூறுவதற்கு பெயர் தான் சந்தர்ப்பவாதம்.

உழவர்களின் கோரிக்கைக்கான அனைத்து அறவழிப் போராட்டங்களையும் பா.ம.க. ஆதரிக்கிறது.  மாறாக பிறருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பயனற்ற போராட்டங்களுக்கு அழைப்பு விடுப்பது, அரசியல் அணி திரட்டும் முயற்சியே தவிர, உழவர்களின் நலன் சார்ந்தது அல்ல என்று பாட்டாளி மக்கள் கட்சி உறுதியாக நம்புகிறது. எனவே, இந்த போராட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியும், பாட்டாளி தொழிற்சங்கமும் பங்கேற்காது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதுமட்டுமின்றி, இத்தகைய போராட்டங்களைத் தவிர்த்து  மக்களுக்கு பாதிப்பற்ற வகையிலான போராட்ட வடிவத்தை  கையில் எடுக்கும்படி அனைத்து கட்சிகளையும் பாட்டாளி மக்கள் கட்சி நட்புடன் கேட்டுக்கொள்கிறது.

No comments:

Post a Comment