கதை கேளு... கதை கேளு கழகத்தின் கதை கேளு!
பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு!
-மருத்துவர் இராமதாஸ்
‘‘உன் நண்பன் யார் என்று சொல், நான் உன்னைப் பற்றிச் சொல்கிறேன்’’ என்று சொல்வது உண்டு. 1977-ஆம் ஆண்டில் முதலமைச்சராக பதவியேற்ற எம்.ஜி.ஆரின் நண்பர்கள் யார் என்பதை 1979-ஆம் ஆண்டில் அவர் கொண்டு வந்த பொருளாதார இட ஒதுக்கீடு என்ற அறிவிப்பே காட்டி விடும்.
பொருளாதார இட ஒதுக்கீடு
1977-ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த எம்.ஜி.ஆர் அடுத்த இரு ஆண்டுகளுக்கு சொல்லிக் கொள்ளும் படியாக எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. இந்த நேரத்தில் தான் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என்ற புதிய அறிவிப்பை வெளியிட்டார் எம்.ஜி.ஆர். அதாவது யாருக்கெல்லாம் குடும்ப வருமானம் ரூ.9 ஆயிரத்துக்கும் குறைவாக இருக்கிறதோ, அவர்கள் அனைவருக்கும் இட ஒதுக்கீடு உண்டு; இதற்கு சாதி தடையாக இருக்காது என்று அறிவித்தார். இந்த அறிவிப்பைக் கேட்டதும் பலருக்கும் அதிர்ச்சி.
திராவிடக் கட்சிகளின் அடிப்படையே சமூக நீதி தான். சமுக நீதியும், இட ஒதுக்கீடும் சாதியைத் அடிப்படையாக கொண்டிருந்தன. ஆனால், எம்.ஜி.ஆர் புரட்சியின் தலைவர் அல்லவா? அதனால் யாரிடமும் கலந்து பேசாமல் இப்படி ஒரு திட்டத்தை அறிவித்தார். பிராமனர்கள் உள்ளிட்ட உயர்சாதிகளைச் சேர்ந்த ஏழைக் குடும்பத்தினரும் இடஒதுக்கீட்டின் பயன்களை அனுபவிக்க வேண்டும் என்றால் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது தான் சரியானது என்று தம்மை எதிர்ப்பவர்களிடம் எல்லாம் எம்.ஜி.ஆர் விளக்கம் அளித்தார். ஆனால், சமூக நீதியில் அக்கறை கொண்டவர்களால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
நீதிமன்றத் தீர்ப்ப்பு
ஆரிய மாயை என்ற தலைப்பில் புத்தகம் எழுதிய அண்ணாவின் பெயரில் கட்சியைத் தொடங்கி அவரது கொள்கைகளுக்கு எதிராக செயல்படுவதை ஏற்க முடியாது என்று அதிமுகவின் முன்னணித் தலைவர்கள் போர்க்கொடி உயர்த்தினர். அதனால் அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை என்று எம்.ஜி.ஆர் சமாதானப்படுத்தினார்.
பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சிகள் வழக்குத் தொடர்ந்தன. ஆனால், நீதிமன்றமோ அந்த வழக்கை தள்ளுபடி செய்து எம்.ஜி.ஆர் வழங்கிய இட ஒதுக்கீடு சரி தான் என்று தீர்ப்பளித்தது. தமிழ்நாடு முழுவதும் எம்.ஜி.ஆர் நல்லவரா?: கெட்டவரா? என்ற விவாதம் நடைபெற்றது.
அதிமுக-திமுக இணைப்பு முயற்சி
இந்த நேரத்தில் இன்னொரு அரசியல் சூறாவளி மையம் கொள்ளத் தொடங்கியது. அதிமுகவையும், திமுகவையும் இணைக்க வேண்டும் என்ற யோசனை தான் அது. இதற்கான முயற்சிகளை மேற்கொண்டவர் அப்போதைய மத்திய எஃகுத்துறை அமைச்சரும், ஒரிசா மாநில முதலமைச்சராக பின்னாளில் பதவி வகித்தவருமான பிஜு பட்நாயக் ஆவார். திமுக தலைவர் கலைஞர், அதிமுக தலைவர் எம்.ஜி.ஆர் ஆகிய இருவரிடமும் அவர் நெருக்கமான உறவு கொண்டிருந்தார். ஆயினும் அதிமுக, திமுக இணைப்பு என்ற யோசனையை அவர் உருவாக்க வில்லை. மாறாக எம்.ஜி.ஆர் தான் இப்படி ஒரு திட்டத்தை பட்நாயக்கிடம் முன்மொழிந்ததாக கூறப்படுகிறது.
அதற்கு முன்பாக நடந்த நிகழ்வுகளும் இதை உறுதி செய்கின்றன. 1979&ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6&ஆம் தேதி தில்லி சென்ற எம்.ஜி.ஆர். இந்திரா காந்தியை சந்தித்து அதிமுக & காங்கிரஸ் கூட்டணி குறித்து விவாதிக்க திட்டமிட்டிருந்ததாக செய்திகள் வெளியாகின. ஆனால், அன்று அந்த சந்திப்பு நடக்கவில்லை. மாறாக மத்திய அமைச்சர் பிஜு பட்நாயக்கை எம்.ஜி.ஆர் சந்தித்து பேசினார். அன்று இரவே கலைஞரை தொடர்பு கொண்டு பேசிய பட்நாயக், விஷயத்தைக் கூறாமல் முக்கியப் பிரச்சினை குறித்து விவாதிக்க உங்களை சந்திக்க வேண்டும் என்று கூறினார். அதற்குள்ளாகவே, அவர் சந்திக்க விரும்புவதன் காரணம் குறித்து கலைஞருக்கு தெரிந்து விட்டது. அவருக்கும் அதிமுக & திமுக இணைப்பில் சம்மதம் தான் என்பதால் சந்திப்புக்கு ஒப்புதல் அளித்தார்.
திமுகவின் நிபந்தனைகள்
அதன்படி, செப்டம்பர் 12-ஆம் தேதி திமுக தலைவர் கலைஞரை அவரது கோபாலபுரம் இல்லத்தில் பிஜு பட்நாயக் சந்தித்து பேசினார். அந்த சந்திப்பில் திமுகவின் மூத்த தலைவர்களான அன்பில் தர்மலிங்கம், முரசொலி மாறன் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர். இந்த இணைப்பு முயற்சியை முன்மொழிந்தவர் யார்? என்று படநாயக்கிடம் திமுக தலைவர்கள் கேட்க, அவரும் எம்.ஜி.ஆர் தான் இந்த யோசனையை தெரிவித்ததாக கூற இரு தரப்பிலும் மட்டற்ற மகிழ்ச்சி.
இந்த யோசனையை ஏற்றுக் கொண்ட கலைஞர், இரு கட்சிகளின் இணைப்புக்காக சில நிபந்தனைகளை விதித்தார். அவற்றின் விவரம் வருமாறு:
1. இரு கட்சிகளும் இணைந்து தி.மு.க. என்ற பெயரில்தான் இயங்கவேண்டும்.
2. அக்கட்சிக்கு அண்ணா படம் பொறித்த கொடியே இருப்பதில் எங்களுக்கு எந்த மறுப்பும் இல்லை.
3. முதலமைச்சராக இப்போதுள்ள எம்.ஜி.ஆர். அவர்களே அப்பதவியில் நீடிக்கட்டும்.
4. இரு கட்சிகளும் இணைவது என்பதற்காகத் தி.மு.கவில் இப்போதுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் யாருக்கும் அமைச்சர் பதவி எதுவும் தேவையில்லை.
5. இரு கட்சிகளும் இணைந்த பிறகு, உரிய நேரத்தில் தலைமைக் கழகத்தின் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் மற்றும் நிர்வாகப் பொறுப்புகள் குறித்து முடிவு செய்து கொள்ளலாம்.
6. முக்கியமான விஷயம்: எம்.ஜி.ஆர். அவர்கள் ஆட்சியில் இடஒதுக்கீட்டில் கொண்டு வந்துள்ள சமூக நீதிக்குப் புறம்பான ஒன்பதாயிர ரூபாய் உச்சவரம்பு ஆணை; பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என்பது உடனடியாகத் திரும்பப் பெறப்பட வேண்டும்.
கலைஞர் - எம்.ஜி.ஆர் சந்திப்பு
அதைக் கேட்ட பிஜு பட்நாயக் “இந்த நிபந்தனைகளை எம்.ஜி.ஆர். ஏற்றுக் கொள்ள எந்தக் கஷ்டமும் இருக்காது. நான் இப்போதே எம்.ஜி.ஆர். இல்லம் செல்கிறேன். இன்றைக்கே உங்கள் இருவரையும் சந்திக்க வைக்கிறேன்’’ என்று கூறினார். ஆனால், கலைஞரோ,“அவரைச் சந்திப்பதில் எனக்கொன்றும் மறுப்பு இல்லை. சந்திப்பதற்கு முன்பு கழக முன்னோடிகள் அனைவரிடமும் நான் கலந்து பேச வேண்டும். பொதுச் செயலாளர் வெளியூர் சென்றுள்ளார். இன்று மாலையில்தான் வருகிறார். அவரையும் மற்றவர்களையும் கலந்து பேசிக் கொள்கிறேன். எனவே சந்திப்புக்கு நாளைய தினம் ஏற்பாடு செய்யுங்கள்” என்று கேட்டுக் கொண்டார்.
அதன்படியே 1979-ஆம் ஆண்டு செப்டம்பர் 13&ஆம் தேதி பிஜு பட்நாயக் முன்னிலையில், எம்.ஜி.ஆரும், கலைஞரும் சந்தித்து பேசினார்கள். இந்த சந்திப்பின் விவரங்களை திமுக தலைவர் கலைஞரின் வார்த்தைகளில் கேட்போம்....
‘‘செப்டம்பர் 13&ஆம் தேதி காலை 11 மணியளவில் பிஜுபட்நாயக் முன்னிலையில் நானும் எம்.ஜி.ஆரும் சென்னை சேப்பாக்கம் அரசினர் விடுதியில் சந்தித்துப் பேசினோம். அப்போது கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர், அ.தி.மு.க. சார்பில் நாவலர் நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.
பிறகு நானும் எம்.ஜி.ஆர். அவர்களும் அந்த விடுதியின் வேறொரு அறையில் தனிமையில் பேசினோம். பிஜுபட்நாயக்கிடம் நான் தெரிவித்த கருத்துக்களும் நிபந்தனைகளும் உண்மைதானா? என்று எம்.ஜி.ஆர். வியப்புடன் கேட்டார். இரு கட்சிகளும் இணைந்து தி.மு.க. என்ற பெயரில் இயங்க வேண்டுமென்பதற்கு தி.மு.க. என்ற பெயரில்தான் ஏற்கனவே பல இடங்களில் கட்டிடங்கள், சொத்துக்கள் இருக்கின்றன என்பது மட்டுமல்லாமல், தி.மு.க. என்பதுதான் அண்ணா உருவாக்கிய கழகம்; எனவே அந்தப் பெயரே நிலைக்கலாம் என்பதையும் அவரிடம் விளக்கினேன்.
அண்ணா கொடியே நீடிக்கட்டும்
அண்ணாவின் படத்தைப் பதித்துள்ள கொடியே இணைந்து விடப் போகும் கட்சியின் கொடியாக இருக்கட்டுமென்றும் கூறினேன். மற்றும் பிஜு பட்நாயக்கிடம் கூறிய மற்றவைகளையும் எம்.ஜி.ஆரிடம் விளக்கினேன். அவர் எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டது மட்டுமல்லாமல், ஒரு குறிப்பிட்ட நாளில் இரண்டு கட்சிகளின் செயற்குழு, பொதுக் குழுக்களையும் வெவ்வேறு இடங்களில் கூட்டி இரு கட்சிகளின் இணைப்புத் தீர்மானத்தை நிறைவேற்றி விடலாம் என்றும் அறுதியிட்டுக் கூறினார்.
பின்னர் இருவரும் நாங்கள் தனித்துப் பேசிக் கொண்டிருந்த அறையிலிருந்து வெளியே வந்து பிஜு பட்நாயக்கிடமும் அங்கிருந்த இரு கட்சிகளின் தலைவர்களிடமும் பேச்சின் முடிவு குறித்துத் தெரிவித்தோம். செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் எங்களைச் சூழ்ந்து கொண்டு கை குலுக்கினர். புகைப்படமெடுத்தனர். நிருபர்களின் கேள்விக்குப் பதில் அளித்த போதும் நான், எம்.ஜி.ஆர். இருவருமே இரு கட்சிகளின் செயற் குழு, பொதுக்குழுக்களில் விவாதித்து முடிவு அறிவிக்கப்படுமென்று கூறினோம்’’
24 மணி நேரத்தில் முயற்சி தோல்வி
இந்த நிகழ்வுகளை தமிழகம் மட்டுமின்றி ஒட்டு மொத்த இந்தியாவும் ஆவலுடனும், ஆச்சரியத்துடன் பார்த்தது. ஆனால், அந்த ஆவலும், ஆச்சரியமும் 24 மணி நேரம் கூட நீடிக்கவில்லை. அதற்கு அடுத்த நாள் வேலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் நிலைமை தலைகீழானது. எம்.ஜி.ஆர் இணைப்பு குறித்து ஒரு வார்த்தையும் பேசவில்லை. எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில் இருந்த அமைச்சர்கள் திமுகவை கடுமையாக தாக்கி பேசினர். இரு கட்சிகளையும் இணைக்க வேண்டும் என்ற யோசனைக்கு அக்கூட்டத்தில் முடிவுரை எழுதப்பட்டது.
எம்.ஜி.ஆரால் ஆர்வத்துடன் தொடங்கப்பட்ட இணைப்பு முயற்சி முறிந்ததற்கான காரணம் யாருக்கும் உறுதியாக தெரியவில்லை. ஆனால், இப்போது ஜெயலலிதா சமாதி முன் தியானம் செய்து அம்மாவின் ஆன்மா தம்மிடம் கூறியதாக ஓ.பன்னீர் செல்வம் பல விஷயங்களைச் சொல்வதைப்போல, அப்போது தமது கனவில் தாயார் வந்ததாகவும், இந்த இணைப்பு வேண்டாம் என்று கூறிவிட்டதாகவும் அன்றைய காவல்துறை தலைவர் மோகன்தாசிடம் எம்.ஜி.ஆர் கூறியதாக ஒரு செய்தி நிலவி வருகிறது.
காரணம் யார்?
ஆனால், அதிமுக -திமுக இணைப்பு முயற்சியை கெடுத்தவர் பண்ருட்டி இராமச்சந்திரன் தான் என்று பின்னாளில் கலைஞர் குற்றஞ்சாற்றினார். இந்த முயற்சிகளுக்கு பிறகு 2008&ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னையில் நடைபெற்ற திமுக விருது வழங்கும் விழாவில் பேசிய கலைஞர் கீழ்க்கண்டவாறு கூறினார்.
‘‘ இரு கட்சிகளின் இணைப்பு குறித்து பேசிய எம்.ஜி.ஆர், அதற்கு அடுத்த நாள் பொதுக்கூட்டத்தில் பேசுவதற்காக வேலூர் சென்றார். காரில் சென்றபோது என்ன நடந்ததோ எனக்கு தெரியாது. காரிலே அவரோடு சென்றவர், காதுக்குள்ளே புகுந்தார். கருத்தை மாற்றினார். வேலூர் பொதுக்கூட்டத்திலே எம்ஜிஆர் பேசும்போது, மாலை பத்திரிகையில் நானும், கருணாநிதியும் இணைய போகிறோம். திமுகவும், அதிமுகவும் இணையப்போகின்றன என்று வந்துள்ள செய்தியை யாரும் நம்பாதீர்கள் என்று ஒரு செய்தியை அங்கே வெளியிட்டார். நான் உங்களுக்கு சொல்கிறேன். இது எப்படி விளைந்தது என்று கேட்டால் அப்போதே சொன்னேன்... பெயர் சொல்ல விரும்பாத ஒருவர் என்று- அவரும் அந்த காரில் சென்றார். அதனுடைய விளைவு இந்த முடிவுக்கு காரணமாக ஆனது’’. எம்.ஜி.ஆருடன் காரில் சென்று காதுக்குள் புகுந்து முடிவை மாற்றியதாக
கலைஞர் குறிப்பிட்ட அந்த நபர் பண்ருட்டி இராமச்சந்திரன்.
No comments:
Post a Comment