Thursday, 21 July 2016

குடும்ப பொருளாதாரத்தை உயர்த்த பெண்களுக்கான தொழில்கள்!!

வீட்டு வேலைகளில் இருந்து விண்வெளிக்கு செல்லும் வேலை வரை இன்று பெண்கள் இல்லாத துறைகளே கிடையாது என்றாகி விட்டது. ஆண்களுக்கு நிகராக பெண்களும் அனைத்து தொழில்களையும் செய்து வருகின்றனர். ஓடியாடி செய்யும் தொழில்களை விட ஒரு இடத்தில் அமர்ந்து செய்யக் கூடிய தொழில்கள் பெண்களுக்கு மிகவும் ஏற்றதாகும்.
பெண்கள் என்னென்ன வேலைகளை செய்யலாம் என்று தெரிந்து கொள்வோம். அதற்கு முன்பாக பெண்கள் சுய தொழில் தொடங்கும்போது நமது தொழிலுக்கான உற்பத்தி பொருளை முதலில் தேர்ந்தெடுக்க வேண்டும். தொழிலகம் அமைக்க வேண்டிய இடம், தொழில் நடத்தும் முறை, தொழிலகத்தை பதிவு செய்தல், நிதி உதவி, உரிமம், மின் இணைப்பு, நீர் வசதி, எந்திரங்கள் மற்றும் தளவாட சாமான்கள் வாங்குதல், திறமையான பணியாளர்களை அமர்த்துதல் என ஒவ்வொன்றையும் அக்கறையுடன் கவனிக்க வேண்டும்.
இனி பெண்களுக்கான தொழில்களை பற்றி பார்ப்போம்.
உணவு பொருட்கள்:
பெண்கள் தாங்களாகவே ஊறுகாய் தயாரிக்கலாம். இதே போல ரொட்டி, ஜாம், மிட்டாய், சிப்ஸ், கேக் சேமியா, அப்பளம், சாம்பார் பொடி, குச்சி ஐஸ், தேங்காய் பப்ஸ், சீவல் ஆகியவற்றை தயாரிக்கும் தொழில்களையும் பெண்கள் குறைந்த முதலீட்டில் செய்யலாம்.
வீட்டு உபயோக பொருட்கள்:
பெண்கள் சோப்பு தயாரிக்கும் தொழில் செய்யலாம். இதேபோல வெள்ளை பினாயில், பல்பொடி, கிளீனிங் பவுடர், ஆயுர் வேதிக் பல்பொடி, வாசனை பத்தி, மற்றும் குடை, பாய், பிளாஸ்டிக் பை, வயர் கூடை, கயிறு தயாரிக்கும் தொழில் ஆகியவற்றையும் பெண்கள் செய்யலாம்.
ஸ்டேசனரி பொருட்கள்:
பென்சில், சாக்பீஸ், பால்பென் ரீபிள், மை, நோட்டு லேமினேஷன், காகிதம், நைலான் பிரஷ், எழுது அட்டை, பைல் ஆகியவற்றை தயாரிக்கும் தொழில்களையும் பெண்கள் தயாரிக்கலாம்.
துணி வகைகள்:
பெண்கள், குழந்தைகளுக்கான உடைகள் தயாரிக்கலாம். டைலரிங் தொழில் செய்யலாம். துணியில் ஸ்கிரீன் பிரிண்டிங், எம்ப்ராய்டரி, பித்தான், ஊக்கு, தலைமுடி கிளிப், ரப்பர் பேண்ட் ஆகியவை தயாரிக்கலாம்.
இந்த தொழில்களை செய்ய ஆலோசனை பெறவும், இதுபோன்ற தேவைகளுக்காக மத்திய - மாநில அரசுகள் தொழில் அமைச்சகம் மூலம் பயிற்சியும் வழங்கி வருகிறது. எனவே நம்பிக்கை இருந்தால் பெண்களே... நீங்களும் தொழில் செய்து வாழ்க்கையில் முன்னேறலாம்..

No comments:

Post a Comment